முருங்கை பூ போலவே.. ஆவாரம்பூ ஆச்சரியம்.. அத்தனை நோயையும் விரட்டும் ஆவாரம் பூக்கள்.. குளுகுளு மலர்கள்
சென்னை: முருங்கையின் பூக்கள் எந்த அளவுக்கு நமக்கு பலன்களை தருகிறதோ, அப்படி ஒரு நலன்களை அள்ளி வருகிறது இந்த ஆவாரம் பூக்கள்.. ஏகப்பட்ட மருத்துவ குணங்களைக் கொண்டது.
இன்று உலகமெங்கும் ஆக்கிரமித்து, கிலியை தந்து கொண்டிருக்கிறது சர்க்கரை நோய். இந்த நோயை கட்டுப்படுத்தும் சக்தி, ஆவார பூக்களுக்கு உண்டு என்கிறார்கள். உள்ளுறுப்புகளை பலப்படுத்துவது முதல், உடல்மேனிக்கு மினுமினுப்பு தருவது வரை அத்தனை நன்மைகளும் இந்த ஆவாரம் பூக்களில் உள்ளது.

குளிர்ச்சி பூக்கள்: மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பூக்களை, உடலில் உள்ள உஷ்ணங்களை நீக்க பயன்படுத்தலாம்.. இந்த பூக்களை காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டால் பல வகைகளில் பயன்படுத்தலாம் அல்லது வெறுமனே இந்த இலைகளை நீரில் போட்டு காயவைத்து குடித்தாலும் கோடி பலன்களை பெறலாம்.
முக்கியமாக, இந்த காய்ச்சிய தண்ணீரை குடிப்பதால், கடுமையான காய்ச்சல் குறைகிறது.. ரத்தம் சுத்திகரிப்படைகிறது.. உடலிலுள்ள தேவையற்ற கழிவுகள் நீங்குகின்றன.. சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.. வெள்ளைப்படுதலை போக்க வேண்டுமானால், இந்த நீரை போல அருமருந்து வேறில்லை. அதேபோல, இந்த சாறு நம்முடைய உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பையும் குறைக்க உதவுவதாக, ஆய்வுகளில் நிரூபணமாகி உள்ளது.
உடற்கழிவுகள்: உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிகமான உதிரப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண், வயிற்றுப்புண், ஆசன வாய் அரிப்பு, ஆசன வாய் எரிச்சல், மூல நோய் எரிச்சல் என பல்வேறு கோளாறுகளை இந்த பூக்கள் போக்குகின்றன..
ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு, டீ போட்டு குடிக்கலாம்.. அல்லது சூப் போல வைத்து குடிக்கலாம்.. இத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.. இதனால், சிறுநீரக பிரச்சனை அத்தனையும் தீர்கிறது.. முருங்கை பூக்களை போலவே, இந்த ஆவாரம் பூக்களுடன், சிறுபருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் சமைத்து சாப்பிட்டால், சிறுநீர் நன்றாக பிரிவதுடன், உடலுள்ள துர்நாற்றமும் நீங்கும்.
தலைமுடி வளர்ச்சி: தலைமுடி வளர்ச்சிக்கு இந்த பூக்கள் பேருதவி புரிகின்றன. இந்த பூக்களை தண்ணீரில் போட்டு காய்ச்சி, அதனுடன் சிறிது எலுமிச்சம்பழத்தை பிழிந்து, தலைக்கு குளித்து வந்தால், அவ்வளவும் குளிர்ச்சியை தரும்..
ஆவாரம் பூக்களே குளிர்ச்சி என்றால், அதனுடன் எலுமிச்சை சேரும்போது, இரட்டிப்பு குளிர்ச்சி ஏற்படுகிறது.. தலைமுடி உதிர்வதும் உடனடியாக நிற்கிறது.. வறண்ட கூண்டலும் வலு பெறுகிறது. செம்பருத்தி பூக்களை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சுவதுபோல, இந்த ஆவார பூக்களையும் சேர்த்து காய்ச்சி தலைமுடிக்கு பயன்படுத்தினால், தலைமுடி நன்றாக வளரும்.
சரும பாதுகாப்பு: கடலை மாவை நம்முடைய சருமத்துக்கு தடவி வருவதுபோல, இந்த ஆவாரம் பூக்களை பொடி செய்து, சருமத்துக்கு பூசி வரலாம்.. தேவைப்பட்டால் இதனுடன் பாசிப்பயறு கலந்து பயன்படுத்தலாம். அல்லது இந்த ஆவாரம் பூக்களை பொடி செய்யும்போதே, இதனுடனும் பாசிப்பயறு, வெந்தயம் சேர்த்து அரைத்து கொள்ளலாம்.

இந்த பவுடரை குளிக்கும்போது பயன்படுத்தி வந்தால், தோலில் ஏற்படும் அரிப்பு, அலர்ஜி, புண்கள், போன்றவை நீங்கிவிடும்.. ஆவாரை பூக்களுடன் கருப்பட்டியையு சேர்த்து சாப்பிட்டு வந்தால், குழந்தை பேறு உண்டாகும் என்பார்கள்.
கண்களுக்கு குளிர்ச்சி: மல்லிகை மலர்களை போலவே, குளிர்ச்சி மிகுந்த இந்த பூக்களை, கண்களின் மீது கட்டிவைத்தால், கண் நோய்கள், கண்ணில் நீர்வடிவது, கண் வீக்கம், கண்களில் ஏற்படும் கட்டிகள் போன்றவை அகன்றுவிடும்.
இப்படி பல நன்மைகளை இந்த ஆவார பூக்கள் தருகிறது என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே, இவைகளை மருந்தாக எடுத்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications