ஆட்டுக்கறி வாங்குறீங்களா.. தலைக்கறிக்குள்ளே "அந்த மேட்டரை" மிஸ் பண்ணாதீங்க.. அதென்ன மூளை ஆம்லெட்?
சென்னை: மட்டனை பொறுத்தவரை, நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும், நன்மை தரும் என்பார்கள்.. அந்தவகையில், ஆட்டு மூளை மிகவும் நன்மை தரக்கூடியது. குறிப்பாக ஆண்களுக்கு அபரிமிதமான நன்மையை தரக்கூடியது.
மட்டனை எப்படி சமைக்கிறோம் என்பதில்தான், அதன் ஆரோக்கியமே அடங்கி உள்ளது. குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும். ஆனால், மட்டன் சாப்பிடும்போது கண்டிப்பாக, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்..

ஆண்கள்: ஆண்களுக்கு 40 கிராமும், பெண்களுக்கு 30 கிராம் நார்ச்சத்தும் எடுத்தே ஆக வேண்டுமாம். அதனால், கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர், தோல் இருக்கும் உருளைக்கிழங்கு போன்றவைகளுடன் சேர்த்து மட்டன் சமைக்கும்போது, மட்டனில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்..
ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், இதயம் சார்ந்த வலி தீர்கிறது.. எலும்பு பலப்படுகிறது, பார்வை கோளாறுகளும் நீங்குகிறது. ஆனால், ஆட்டின் மூளையை தனியாக வறுத்து சாப்பிடுவார்கள்.. இது கூடுதல் சுவையை தரக்கூடியது.. அத்துடன், மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுப்பது.. ஆட்டின் மூளை கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.. நினைவாற்றலை பெருக்குகிறது..
ஆட்டு மூளை: அதேபோல, ஆட்டு மூளையில் கொழுப்பு மிக மிக குறைவு. இந்த மூளையிலுள்ள பாஸ்பரஸ், கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் செய்கிறது.. நினைவாற்றலை அதிகரிக்கும். ஆட்டு மூளையை உணவில் சேர்த்துக்கொள்வதால், கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்துகிறது..
எனினும், ஆண்களுக்கு ஆட்டு மூளை மிகவும் சிறந்ததாம்.. குறிப்பாக, விந்தணு குறைபாடு உடைய ஆண்கள், ஆட்டுமூளையை சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும் என்கிறார்கள்.
இதய ஆரோக்கியம்: அதனால்தான், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் ஒரு பாரம்பரிய உணவாகவே இதை வைத்திருக்கிறார்கள். பாரம்பரிய சீன மருத்துவத்தில், இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை வலுவூட்டுவதாக நம்பப்படுகிறது.. அத்துடன், ரத்த சோகை மற்றும் ஹெபடைடிஸ் போன்றவைகளுக்கு சிகிச்சையளிப்பதிலும் உதவுகிறதாம்.
ஆயுர்வேத மருத்துவத்தில், அல்சைமர் நோய்க்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இதிலுள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் நல்ல மூலமாகும்.. இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.. நம்முடைய உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களான தாமிரம் மற்றும் துத்தநாகமும் இதில் அதிகமாகவே உள்ளது..

ஆட்டு மூளை பொரியல்: இந்த ஆட்டுமூளையை சுத்தம் செய்வது மிகவும் எளிது.. மூளையை முதலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து 2 முறை கழுவி கொள்ள வேண்டும். பிறகு, மூளையின் மேலுள்ள மெல்லிய ரத்த நாளங்களை கைகளாலேயே பிரித்து எடுத்துவிட வேண்டும். இவைகளை நீக்காமல் சமைக்கக்கூடாது. அதற்கு பிறகு, சுத்தம் செய்யப்பட்ட மூளையை, லேசான சுடுநீரில் போட்டு எடுத்துவிடலாம்.
இப்போது, நல்லெண்ணெய் ஊற்றி, வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.. பிறகு, ஆட்டு மூளையை அப்படியே போடலாம் அல்லது நான்கைந்து துண்டுகளாக வெட்டியும் போடலாம்.. மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து பிரட்டினாலே மூளை இன்னும் உதிர்ந்துவிடும்.. காலி டம்பளர் மட்டுமே தண்ணீர் ஊற்றி, வதக்கி 10 நிமிடம் மெல்லிய தீயில் வேக வைத்தால் போதும்.. கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம்.
பொடிமாஸ்: இந்த மூளையில், முட்டை சேர்த்தும் பொடிமாஸ் போல செய்யலாம்.. வாணலில் எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் என அனைத்தையும் நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.
பிறகு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூளையும் சேர்த்து வதக்க வேண்டும். சுத்தம் செய்து வைத்திருக்கும் மூளையை போட்டு நன்றாக கிளற வேண்டும்.. இதில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து, பிறகு, ஒரு முட்டையை அதிலேயே உடைத்து ஊற்றி கிளற வேண்டும். இறுதியில், மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கவிடலாம்.
ஆம்லெட் ரெடி: இதிலேயே ஆம்லெட் போலவும் செய்யலாம்.. அதாவது, ஒரு பாத்திரத்தில் மூளையை சுத்தம் செய்து போட்டு, அதிலேயே முட்டையையும் உடைத்து ஊற்றி, நறுக்கிய வெங்காயம், கறி மசாலா, மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது, உப்பு, பச்சை மிளகாய் போட்டு ஒன்றாக அனைத்தையும் கலக்கவும், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மொத்தத்தையும் அடித்து தோசை போல ஊற்றி பிரட்டி போட்டு எடுத்தால், மூளை ஆம்லெட் தயார்.












Click it and Unblock the Notifications