கொத்து கொத்தா கொட்டுதா முடி? பூந்திக்கொட்டை இருக்கே.. அதைவிடுங்க.. சூப்பரான பூந்திகொட்டை ஜூஸ் போதும்
சென்னை: பூந்திக்கொட்டைகள் தலைமுடிக்கு மட்டுமல்ல, வீட்டு சுகாதாரத்தை காக்கவும் உதவுகிறது.. இந்த பூந்திக்கொட்டையின் சாறு எப்படி தயாரிப்பது தெரியுமா? எதற்கெல்லாம் அந்த சாற்றினை பயன்படுத்தலாம் தெரியுமா?
பூந்திக்கொட்டைகளை, பூவந்திக்கொட்டை, சோப்புக்காய் என்றெல்லாம் சொல்வார்கள்.. நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியது.. பூந்திக்கொட்டை கொட்டையை வறுத்து, தோலை உரித்து, பவுடராக்கி சீயக்காய்தூளுடன் கலந்து தலையில் தேய்த்து, அலசினால், தலைமுடி நீண்டு வளருமாம்.

அழுக்குகள்: இந்த கொட்டைகளுடன், இலுப்பை, ரோஜாப்பூ, செம்பரத்தை பூ, செம்பரத்தி இலைகள், சீகைக்காய், வெட்டிவேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம் என அனைவற்றையும் சம அளவு எடுத்து காயவைத்து, தூள் செய்து, குளியல் பவுடராக பயன்படுத்துவார்கள்.
இந்த பவுடரை தேய்த்து குளிக்கும்போது, உடலிலுள்ள கிருமிகள், அழுக்குகள் எல்லாம், நுரையில் கலந்து வெளியேறி விடும். உடலும், மனமும் புத்துணர்வு அடையும். உடலில் நல்ல நறுமணம் உண்டாகும்.
இயற்கை ஷாம்பு: அதேபோல, தலைமுடிக்கு இந்த கொட்டைகளை வைத்து எப்படி ஷாம்பு தயாரிப்பது தெரியுமா? நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். இப்போது, இதனுடன், சிகைக்காய், பூந்திக்கொட்டை என மூன்றையும் தண்ணீரில் ஊறவிட வேண்டும். இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை, இவைகளை லேசாக சூடாக்க வேண்டும்..
கொதி வரும்போது இறக்கி ஆறவிட்டு, மிக்சியில் அரைத்து வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த ஷாம்பினை தலைக்கு தேய்த்தால், தலைமுடி உதிராது, தலைமுடி நீளமாக வளரும்.
வீட்டு உபயோகம்: ஆனால், வீட்டு உபயோகத்துக்கும், இந்த பூந்திக்கொட்டை பயன்படுத்தலாம். இதற்கு, இந்த கொட்டையிலிருந்து சாறு எடுத்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா? பூந்திக்கொட்டையின் விதையை நீக்கிவிட்டு, அதன் மேலுள்ள தோலை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் பூந்திக்கொட்டையின் தோலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பூந்திக்கொட்டை கொதிக்கும்போது நுரை மேலேம்பி வரும்.. அப்போது அடுப்பை மெதுவாக வைத்து, அரைமணி நேரம் கழித்து நிறுத்திவிடலாம். இந்த சாற்றினை ஆறவைத்து வடிகட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளலாம். வடிகட்டும்போது, அந்த சக்கைகளை கீழே தூக்கி எறிய வேண்டாம். இதே சக்கையை இதுபோலவே கொதிக்கவைத்து, 3 அல்லது 4 முறை சாறு தயாரிக்கலாம்.
பாக்டீரியாக்கள்: இந்த சாறு முழுக்க முழுக்க பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியது.. அதனால், வீடுகளிலும், வீட்டை சுற்றிலும், தோட்டங்களிலும் பாக்டீரியாக்களை பரவாமல் தடுக்கிறது.. இந்த சாற்றிலிருந்து சிறிது எடுத்து, அதனுடன் தண்ணீரை கலந்து துணி துவைக்கும்போது பயன்படுத்தி கொள்ளலாம்.. முக்கியமாக, பட்டுப்புடவைகளில் கறைகள் இருந்தால், அதனை எளிதாக போக்கக்கூடியது இந்த சாறு.
தங்க நகைகளின் நிறம் மாறிவிட்டால், பூந்திக்கொட்டைகள் உள்ள தண்ணீரில் நகைகளை ஊறவைத்து, அலசுவார்கள். அதேபோல, இந்த சாற்றினை பயன்படுத்தி பாத்திரங்களையும் கழுவலாம். மொத்தத்தில், இந்த பூந்திக்கொட்டை இயற்கையான கிருமி நாசினியாகும்.












Click it and Unblock the Notifications