4 ஆண்களை சமாளிக்க இந்த ஒரு பெண்ணுக்கு எத்தனை மனோதிடம்.. டாக்டர் பரூக் அப்துல்லா யாரை பாராட்டுகிறார்?
சென்னை: மதுவால் இன்று எத்தனை குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. இதை கருத்தில்கொண்டு மது குடிப்பதில் அரசு ஏதேனும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: குடும்பங்களை சீர்குலைக்கும் மது
சமீபத்தில் என்னைச் சந்தித்த குடும்பத் தலைவி அனுபவித்து வரும் மன அழுத்தம் சொல்லில் வடிக்க இயலாதது.

தப்பிக்க இயலாத வழியும் இல்லாத மூலை இடுக்கில் வசமாகச் சிக்கிக் கொண்ட பூனைக்குக் கிடைக்கும் அரை கன நேரத்தில் கூட எதையாவது செய்து எகிறிக் குதித்தோட எத்தனிக்கும் இல்லையா அது போன்றதொரு தருணத்தில்அவருடைய மன அழுத்தத்தைப் பகிர்ந்தார். மது செய்யும் தீமைகளை பொது சமூகத்திற்கு சொல்லும் கடமை இருப்பதால் இங்கு எழுதுகிறேன்.
"ரொம்ப மன அழுத்தமா.. பாரமா இருக்கு சார்." "என்ன ஆச்சு மா.. உங்க கணவர் எங்க? உங்களுக்கு எத்தன பிள்ளைங்க?" " மூனு ஆம்பள பிள்ளைங்க மூனு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். அவரு தினமும் வீட்டுக்கு குடிச்சுட்டு தான் வருவார் சார். வீட கண்டுக்கறதே இல்ல" "பேரப்பிள்ளைங்க இருக்காங்களா? மூனு பிள்ளைகளும் உங்க கூட இருக்காங்களா?" "மூனு பசங்களும் தினமும் குடிக்கிறானுங்க சார். என்னால முடியல . அதனால தனியா வச்சுட்டேன்."
"உங்க பசங்க சின்ன வயசுல இருந்தே உங்க வீட்டுக்காரர் குடிச்சுட்டு தான் வீட்டுக்கு வருவாரா?" "ஆமா சார். இவரு கண்டுக்காததால பசங்க மூனு பேருமே தண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. இப்ப இவரு கேட்டா.. நீயே தண்ணி அடிச்சுட்டு தான இருக்க. எங்கள திருத்த வரியானு கேக்குறானுங்க சார்" "மூனு பசங்களும் மனைவிகள் கூட பிரச்சனை இல்லாம இருக்காங்களா?" "இல்ல சார். அடிக்கடி பிரச்சனை வரும். இளையவனுக்கு இப்ப தான் கல்யாணம் பண்ணி வச்சேன். பொஞ்சாதி மாசமா இருக்கா. அவள குடிச்சுட்டு அடிச்சு பெரிய பிரச்சனை ஆகிடுச்சு"
" அடடா.. இத்தனை பிரச்சனைகளையும் ஒரு ஆளா சமாளிக்கிறீங்க. இதுவே அழுத்தம் தான்மா.. மது அடிமை ஒழிப்பு மையங்கள் இருக்குமா அங்க அனுப்பி குணப்படுத்தலாம்" "சரி சார்.. புருசன் இருந்தும் இல்லாத மாதிரி .. மூனு பசங்க இருந்தும் எவனாலயும் துளி சந்தோசம் இல்ல. இந்த தண்ணி இல்லாத வீடு தான் சார் உண்மைலயே நிம்மதியான வீடு" "உண்மை தான் மா.." "எங்க கிட்ட சொத்து இருக்கு.. நிலம்புலம் இருக்கு.. ஆனா நிம்மதி இல்ல.. எம் புருசன் தண்ணி அடிச்சு அவர பாத்து மூனு பசங்களும் தண்ணி அடிக்க ஆரம்பிச்சு இப்ப நான் படுற கஷ்டத்தை அவனுங்கள கட்டுன பாவத்துக்கு பொண்டாட்டிகளும் அவதி படுறாங்க சார்"
"கவலைப்படாதீங்க மா. உங்க வீட்டுக்காரர கூட்டிட்டு வாங்க. பேசுவோம். முதல்ல அவர வெளிய கொண்டு வருவோம்." "சரிங்க சார்.." அந்தப் பெண்மணி கூறியதில் முக்கியமான உண்மை தண்ணி புகுந்த வீட்டில் அனைத்தும் இருந்தும் நிம்மதி இருக்காது. இந்த சகோதரியின் வாழ்வின் முக்கியமான நான்கு ஆண்களும் மதுவுக்கு அடிமை. நான்கு மது அடிமைகளுடன் ஒரு பெண்ணாக சமாளிப்பதற்கு தனி மனோதிடம் வேண்டும்.
இதே நிலையில் ஒரு ஆண் இருந்தால் கட்டாயம் இத்தனை மனோதிடத்துடன் அணுக முடியாது. இப்படி பல்லாயிரம் குடும்பத் தலைவிகள் வாழ்ந்து வருகின்றனர். நமது அரசாங்கம் இதை கருணையுடன் அணுகி மது அருந்துதலை வரைமுறைக்குட்படுத்தி மது அருந்துதலுக்கு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த மதுவால் உடல் சார்ந்த மன நலம் சார்ந்த பொருளாதாரம் சார்ந்த சமூகம் சார்ந்த பல பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. கொலைகள், தற்கொலைகள், சாலை விபத்துகள், கற்பழிப்பு, தகாத உறவுகள் போன்ற சமூக சீர்கேடுகளில் "மதுவின் பங்கு" முக்கியமானதாக மாறி இருக்கிறது.
மது அருந்துதலை நார்மலைஸ் செய்யும் நிலைக்கு நமது சமூகம் செல்வது ஆபத்தான போக்காகும். மது அளவில் சிறிதோ அதிகமோ அது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற கொள்கையே சரி. இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications