அன்று சாந்தி சவுந்திரராஜன் ! இன்று கெலிஃப்! ஒலிம்பிக்கில் விஸ்வரூபம் எடுத்த பாலின பிரச்சினை!
சென்னை: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாக்சிங்ஸில் இம்ரான் கெலிஃப்பின் பாலினம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியாகி வரும் நிலையில் மீண்டும் ஒரு நீள விளக்கத்தை அளித்துள்ளார் டாக்டர் பரூக் அப்துல்லா. அவர் பெண்தான் என்பதற்கான சாத்தியங்களை கூறி விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒலிம்பிக் பாக்சிங் போட்டியில் நடந்த சர்ச்சை குறித்து இன்னும் சில கேள்விகள் மற்றும் என் விளக்கங்கள்...

1. இம்ரான் கெலிஃபுக்கு XY குரோமோசோம் கண்டறியப்பட்டதால் அவர் "ஆண்" தான். அவர் பெண் கிடையாது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? (இவருக்கு XY ஜீன்கள் கண்டறியப்பட்டதாக உலக பாக்சிங் கூட்டமைப்பு தலைவர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் ஆவணமாக வெளியிடவில்லை)
இம்ரான் கெலிஃப் பிறக்கும் போது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான வெஜைனா மற்றும் கர்ப்பப்பை ஃபாலோபியன் ட்யூபுகளுடன் பிறந்துள்ளார். பிறந்ததும் பெண்ணாக , வளர்ந்ததும் பெண்ணாக அவருக்கு இருக்கும் குரோமோசோம் கோளாறு காரணமாக ஓவரி எனும் சினைப்பை உருவாகாமல்/ குறைவாக உருவாகி இருப்பதால் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைவாகவும் ஆண்மைக்கான டெஸ்டோஸ்டிரோன் சற்று அதிகமாகவும் இருக்கும்.
இவருக்கு மாதவிடாய் ஏற்படாது, பூப்பெய்த இயலாது. ஆனால் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரொஜெஸ்ட்ரானை வெளியில் இருந்து மாத்திரை வழியாக வழங்கினால் ஏனைய பெண்களைப் போல மாதவிடாய் நிகழும். கூடவே ஏ ஆர் டி எனும் டெஸ்ட் ட்யூப் முறைப்படி இவரால் இவரது கர்ப்பபையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரு ஆணால் குட்டிக் கரணம் போட்டாலும் மருத்துவ ரீதியாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இவர் பெண்ணாக இருப்பதால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். எனவே இவர் ஆண் எனும் கூற்று அடிபட்டுப் போகிறது.
2. அடுத்து இவர் ஒரு டிரான்ஸ் ஜென்டர் எனும் கருத்து பரவுகிறது. அது குறித்த எனது மருத்துவ ரீதியான கருத்து. ட்ரான்ஸ் ஜென்டர் என்றால் பிறப்பால் ஒரு பாலினம் என்று கூறப்பட்டு அதை வளரும் போது எதிர் பாலினமாக தன்னை உணர்ந்து அந்த பாலினமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதே ட்ராண்ஸ் ஜென்டர் ஆகும்.
அதாவது பிறக்கும் போது ஆண் குறியுடன் பிறந்த குழந்தையை ஆண் என்று வளர்ப்பார்கள் . பெரும்பான்மை குழந்தைகள் தங்களை ஆண்கள் என்றே அடையாளப்படுத்திக் கொள்வார்கள். ஆயினும் அரிதாக சிலர் வளரும் போது அவர்களுக்குள் பெண்மை இருப்பதை உணர்வார்கள். தவறாக தான் ஆணாக சித்தரிக்கப்படுகிறோம் என்று உணர்வார்கள். அத்தகையோர் தங்களை பெண்ணாக வெளிப்படுத்தி முழுமையாக பெண்ணாக மாறிவிடுவார்கள். இதுவே டிரான்ஸ் ஜென்டர் ஆகும்.
ஆனால் இந்த விசயத்தில் பெண்ணாகப் பிறந்து பெண்ணாக வளர்ந்து பெண்ணாகத் தனது பாலினத்தை வெளிக்காட்டிக் கொள்ளும் ஒருவரை டிரான்ஸ் ஜென்டர் என்று கூற இயலாது. இவர் சிஸ் ஜென்டர் வகையில் வருவார். இதுவே பெரும்பான்மை மக்களுக்கு இருக்கும் பாலின வெளிப்பாடு.
நானும் ஒரு சிஸ் ஜென்டர் தான். பிறக்கும் போது ஆண், நான் ஆணாக எனது பாலினத்தை வெளிக்காட்டிக் கொள்கிறேன். எனவே நான் சிஸ் ஜென்டர்.
3. இவருக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகமாக இருப்பதால் அட்வாண்டேஜ் கிடைத்து வெற்றி பெற்றார். இந்த வாதமும் தவறு தான். காரணம் இந்த கெலிஃப் இன்று பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் முறையாக விளையாட வரவில்லை. மாறாக 2018 இல் இருந்து விளையாடி வருகிறார். இப்படி பலரும் நினைப்பது போல அவர் ஆணாக இருந்தால் அல்லது டெஸ்டோஸ்டிரோன் மூலம் அட்வாண்டேஜ் பெறுபவராக இருந்தால் கடந்த ஆறு வருடங்களில் அவர் தான் நம்பர் ஒன் பாக்சராக இருக்க வேண்டும்.
ஆனால் அவர் விளையாடிய முதல் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் ரவுண்டில் தோல்வி. அதற்கடுத்த ஆறு முயற்சிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வி. டோக்யோ 2021 ஒலிம்பிக்கில் முதல் ரவுண்டில் வெற்றி இரண்டாவது ரவுண்டில் தோல்வி அதற்கடுத்து தனது திறனை வளர்த்துக் கொண்ட படியால் தான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
டெஸ்டோஸ்டிரோன் மூலம் அட்வாண்டேஜ் பெற்றிருந்தால் இந்நேரம் பிரபலமாகியிருப்பார். ஆனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் குறிப்பிட்ட இந்த போட்டி நடக்கும் வரை அவர் பிரபலம் கிடையாது. இதில் இருந்தே அவர் ஆணும் இல்லை அவரது டெஸ்டோஸ்டிரோனால் மட்டும் அவருக்கு பெரிய அட்வாண்டேஜ் கிடைக்கிறது என்ற வாதத்தில் உப்பு சப்பில்லை என்பது தெரிகிறது.
4. அப்பறம் ஏன் உலக பாக்சிங் அசோசியேசன் அவருக்கு 2023 இல் தடை விதித்தது? உங்களுக்கு இந்தத் தடை தான் தெரியும் என்றால் இன்னொரு தடையை நான் கூறுகிறேன். உலக பாக்சிங் சம்மேளனத்தையே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை செய்துள்ளது. இதற்குக் காரணம் உலக பாக்சிங் அசோசியேசன் ரஷ்யாவில் இருந்து இயங்கும் உமார் க்ரெம்ளரின் ஏதேச்சிகார கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதாலும் அதன் விளைவாக பல தவறான முடிவுகளை வழிகாட்டுதல்களை செய்து பாரபட்சமாக செயல்படுவது தெரிந்ததால் அந்த கூட்டமைப்பை தடை செய்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி.
இது அரசியல். சரி , ஒருவரை "ஆண்" என்று தடை செய்ய வேண்டும் என்றால் அவர் விளையாட வந்த 2018 ஆம் ஆண்டே தடை செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை . இதற்குக் காரணம் அவர் ஆண் கிடையாது. அவர் ஒரு பெண் . குரோமோசோம் பிரச்சனை இருக்கும் ஒரு பெண். அந்த நாளைய சட்ட திட்டங்களின் படி சரியான அளவு டெஸ்டோஸ்டிரோன் இருந்ததால் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார்.
2021 டோக்யோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்றார். ஆனால் அப்போது யாருமே இதைப் பற்றி பெரிதாக பேசவில்லை. காரணம் பேசுவதற்கு இதில் ஒன்றுமில்லை. சர்வதேச தடகள சட்டங்களின் படி இத்தகைய அரிதினும் அரிதாக ஹார்மோன் மற்றும் குரோமோசோம் பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு தனியாக சட்ட திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறையில் உள்ளது.
அதன் அடிப்படையில் ஐஏஏஎஃப் காம்பெடிசன் ரூல்ஸ் 2018 -2019 இன் படி இத்தகைய ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம் பிரச்சனைக்கு உள்ளான மகளிருக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் 10 நேனோமோல் / லிட்டர் என்ற அளவுக்கு மேல் இருத்தல் கூடாது என்ற விதிமுறையைக் கடைபிடித்தே இவர் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு குத்துச் சண்டை சாம்பியன் சிப் போட்டியின் போது ரஷ்ய வீராங்கனை அமினேவாவை இவர் வெற்றி பெற்ற உடனே திடீரென்று இவர் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் போட்டிக்கு இடையே தடை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு எந்த ஆவணமும் இல்லாமல் பாலின பரிசோதனைகளை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தாமல் தடை செய்தது தவறு என்று ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
இவ்வாறு செய்த தடையை ஒலிம்பிக் கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலேயே இந்த ஒலிம்பிக் போட்டியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட குறைவாக இருந்தமையால் இவர் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த வாதமும் தற்போது அடிப்பட்டுப் போகிறது.
5. எல்லாம் சரி தான் ஆனால் டெஸ்டோஸ்டிரோன் கூடுவதால் அட்வாண்டேஜ் தானே. அதற்கு என்ன பதில்? ஆய்வு முடிவுகளின் படி ஆணுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் கூட இருக்கும் போது கிடைக்கும் அட்வாண்டேஜை ஒப்பிடும் போது பெண்ணுக்கு டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக இருந்தால் கிடைக்கும் அட்வாண்டேஜ் ஒப்பீட்டளவில் குறைவு என்று பெர்மான் மற்றும் காரியர் தடகள வீராங்கனைகளிடம் 2017 இல் செய்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக 400 மீட்டர் ஓட்டம் , 800 மீட்டர் ஓட்டம் , 1500 மீட்டர் ஓட்டம், மைல் ஓட்டம் ஆகிய நான்கில் இது போன்ற அட்வாண்டேஜ் அதிகம் இருப்பதால் இந்த விளையாட்டுகளில் பங்குபெறும் பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் 5 நானோமோலுக்கு கீழ் தான் இருக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் உள்ளது.
பாக்சிங் பொருத்தவரை தற்போதைய ஆராய்ச்சி முடிவுகளின்படி சர்வதேச தடகள வீரர்கள் சமேளன விதிகளின் படியே இந்த வீராங்கனைகளின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் உள்ளன. அடுத்து அட்வாண்டேஜ் என்று வந்து விட்டால் ஆண்களைப் பற்றியும் பேச வேண்டும் தானே... தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று குவித்த உசைன் போல்டுக்கு "ஸ்ப்ரிண்டிங் ஜீன்" எனும் ஓட்டத்துக்கு தோதான அட்வாண்டேஜ் வழங்கும் ஜீன் இருக்கிறது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் வழியாக ஓட்டத்துக்கு உதவும் தசைகள் விரைவாக வேலை செய்வதும், நீண்ட தசை நார்களையும் அவர் கொண்டிருக்கிறார். நீச்சல் போட்டிகளில் பதக்கங்களை வென்று குவித்த மைக்கேல் ஃபெல்ப்ஸ்க்கு நீண்ட புஜம் மற்றும் கைகள் என்று மீனை ஒத்த உருவம் தான் முக்கிய அட்வாண்டேஜ்.
1960 களில் வானில் பறந்து சாகசம் செய்யும் ஸ்கையிங் போட்டிகளில் முடிசூடா மன்னராக இருந்த மாண்டிரண்டாவுக்கு பிறவியிலேயே ரத்தத்தில் அதிகமான சிகப்பு ரத்த செல்கள் இருந்தது முக்கிய காரணம். மேற்கூறிய ஆண்கள் ஒரு எடுத்துக் காட்டுதான். இது போல ஏனைய ஆண்கள் சாதிக்கும் போது அது டேலண்ட் என்றும் ஒரு பெண் சாதிக்கும் போது நீ ட்ராண்ஸ் ஜென்டர் . நீ ஆண் என்று பேசுவது சரியல்ல.
6. சரி இத்தகையோருக்கு தனியாக ஒலிம்பிக் நடத்தலாமே? ஏற்கனவே உடல் சவால் கொண்டோருக்கு எனத் தனியாக ஒலிம்பிக் நடந்து வருகிறது. தற்காலத்தில் நாம் பேதம் காணாமை அனைவரும் ஒருங்கிணைத்து அனைவரையும் உள்ளிளுத்துக் கொள்ளும் INCLUSIVENESS , NON DISCRIMINATION , GENDER EQUALITY குறித்தெல்லாம் பேசி வருகிறோம்.
இந்த சூழ்நிலையில் பெண்ணாகப் பிறந்து பெண்ணாக வளர்க்கப்பட்டு வரும் ஒருவரை அவருக்கு இருக்கு குரோமோசோம் கோளாறு/ ஹார்மோன் சிக்கல் ஆகியவற்றை காரணம் காட்டி ஒதுக்குதல் மற்றும் தீண்டாமை செய்தல் சரியா ? தவறா? பிசிஓடி எனும் ஹார்மோன் பிரச்சனையால் வளர் இளம் பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் சராசரியை விட அதிகமாகத் தான் இருக்கும். இவர்களுக்கு மட்டும் தனியாக ஒலிம்பிக்ஸ் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுமா? அல்லது பிசிஓடி இருக்கும் காரணத்தாலேயே டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகமாக இருப்பதால் இவர்கள் அனைவரும் ஆண்கள் என்று முத்திரை குத்தப்பட்டு தடை செய்யப்பட வேண்டுமா?
நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நம் வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதற்கு பெயர் சூட்டி வளர்க்கிறோம். அந்தக் குழந்தை வளர்கிறது. தடகள வீராங்கனையாக மாறி தொடர்ந்து சாதிக்கிறது. ஆசிய போட்டிகளில் பங்கு கொண்டு பதக்கம் வெல்கிறாள் அந்தப் பெண். ஆனால் திடீரென்று நீ பெண்ணல்ல, நீ ஒரு ஆண் என்று கூறி அவளுக்கு இருந்த ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம் என்ற ஹார்மோன் பிரச்சனையை காரணமாகக் கூறி அவளது பதக்கத்தை பறித்து அவளது எதிர்காலத்தை முடமாக்கினால் பெற்றோராக எத்தனை வலி கொள்வீர்கள்?
அதே நிலை தான் சகோதரி சாந்தி சவுந்தரராஜன் அவர்களுக்கு நிகழ்ந்தது. இன்று கெலிஃபுக்கு நடந்து வருகிறது. நாளை நம் வீடுகளில் வளரும் பெண் குழந்தைகளுக்கும் நேரலாம். என்னைப் பொருத்தவரை சாந்தியும் கெலிஃபும் வேறு வேறு அல்ல... இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications