Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: H3N2 காய்ச்சலுக்கும் கொரோனாவுக்குமான வித்தியாசம் என்ன? யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படும்?

எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கும் கொரோனா காய்ச்சலுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன- டாக்டர் பரூக் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்3.என்2 வைரஸ் காய்ச்சலுக்கும் கொரோனா காய்ச்சலுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன என்பது குறித்து சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:

கேள்வி: இந்த எச்3 என்2 என்ற வைரஸ் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?

பதில்: எச்3என்2 என்பது இன்ப்ளூயன்ஸா வைரஸ். இதில் ஏ, பி என இரு வகைகள் உண்டு. இதில் இன்ப்ளூயன்ஸா ஏ வகையை சேர்ந்த ஒரு திரிபுதான் எச்3என்2. இந்த வைரஸ் 1968- 1969 ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் பெருந்தொற்றாக தொடங்கியது. அப்போது முதல் இந்த வைரஸ் பருவ காய்ச்சலாக (seasonal flu) ஆண்டுதோறும் துரத்திக் கொண்டே இருக்கிறது.

இதனுடைய அறிகுறிகள் எப்படி இருக்கும் என்றால் காய்ச்சல், இருமல், வறட்டு இருமல், தொண்டை வறட்சி, தொண்டை வலி, அதீத உடல் அசதி, உடல் சோர்வு, வயிற்றுவலி, வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகியவை ஆகும்.

 உயிரிழப்பு

உயிரிழப்பு

கேள்வி: இந்த வைரஸ் பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்ததாக அறிவித்துள்ளார்கள். உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்துமா?

பதில்: உயிரிழப்புகள் என்பது அரிதிலும் அரிதாக உயிரிழப்புகள் ஏற்படும். கடந்த 3 மாதங்களாகவே இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவே ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது. இருந்தாலும் தொற்று கண்டறியப்பட்டவர்களில் இரு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. அதிலும் தமிழகத்தில் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. கொரோனா 2ஆம் அலையின் போது உயிரிழப்புகள் ஏற்பட்டதை போல் இந்த ப்ளூ காய்ச்சலும் உயிரிழப்புகளை தருமா என நாம் கற்பனை செய்து பார்க்கத் தேவையில்லை. முதியவர்கள், இதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்கள் உள்ளிட்டோருக்குத்தான் இந்த நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும்.

 3000 பேர் பாதிப்பு

3000 பேர் பாதிப்பு

கேள்வி: இந்தியாவில் இந்த பருவ காய்ச்சலால் இதுவரை 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளார்கள். இவை எல்லாமே எச்3 என்2 தானா இல்லை வேறு வகையான சீசனல் ப்ளூ பரவி கொண்டிருக்கிறதா

பதில்: பொதுவாக ஆண்டுதோறும் எச்1என்1 எனும் பன்றிக் காய்ச்சல் குறித்து அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முறை எச்1 என்1 தாக்கம் குறைவாகவும் எச்3.என்2 அதிகமாகவும் காணப்படுகிறது. 3000 அளவுக்கு இந்த எச்3 என்2 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள். கிட்டதட்ட 900 பேர் எச்1என்1 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளார்கள். இந்த இரு வைரஸ்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அறிகுறிகளை பொருத்தவரை எச்3என2 தீவிரம் அதிகமாக இருக்கிறது.

 யாருக்கு பாதிப்பு

யாருக்கு பாதிப்பு

கேள்வி: எச்3என்2 வகை வைரஸ் யாருக்கெல்லாம் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும்?

பதில்: 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கும் 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கும், இணைநோய் உள்ளவர்களுக்கு தீவிர பாதிப்பு இருக்கும்.

கேள்வி: எந்த மாதிரியான இணை நோய்கள் இருந்தால் இந்த வைரஸ் பரவும்?

பதில்: குழந்தைகள் என சொன்னால், ஆஸ்துமா, வீசிங், ஊட்டச்சத்து இருக்கும் குழந்தைகள், குறை மாதத்தில் எடை குறைந்து பிறந்த குழந்தைகள் ஆகியோரை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். முதியவர்களை பொருத்தமட்டில் நீரிழிவு, ரத்த கொதிப்பு, இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்து வருவோர், உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டு அதற்காக சிகிச்சை எடுத்து வருவோர் ஆகியோர் கவனமாக இருத்தல் வேண்டும்.

 தற்காத்து கொள்வது எப்படி?

தற்காத்து கொள்வது எப்படி?


கேள்வி: இந்த எச்3என்2 வைரஸில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

பதில்: கொரோனா காலத்தில் கடைபிடித்த அதே வழிமுறைகளை கையாள வேண்டும். சளி, இருமல் ஆகியவற்றின் மூலமாகத்தான் இந்த ஃப்ளூ காய்ச்சல் பரவுகிறது. அவர்களிடம் பழகும் போது முகக் கவசம் அணிய வேண்டும், தொற்று அறிகுறி இருப்போர் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளையும் பெரியவர்களையும் இணை நோய் இருப்பவர்களையும் அடுத்த சில வாரங்களுக்கு அத்தியாவசியமின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி கொள்ள வேண்டும். இந்த ப்ளூ காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி இருக்கிறது. ஆண்டுதோறும் அப்டேட் செய்யப்பட்ட ஊசி இருக்கிறது அதை குழந்தைகளும் பெரியவர்களும் போட்டு கொள்ளலாம்.

 என்ன தொடர்பு

என்ன தொடர்பு

கேள்வி: எச்3என்2 வைரஸும் கொரோனாவை போல் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதாக பரவும் என கூறியுள்ளார்கள். எச்3என்2வுக்கும் கொரோனாவுக்கும் எந்த மாதிரியான தொடர்பு இருக்கிறது.

பதில்: இரண்டுமே சுவாச பாதை வழியாக பரவும் வைரஸ். இரண்டுமே வெவ்வேறு வைரஸ் குடும்பங்களை சேர்ந்தது. ஆனாலும் இன்பளூயன்ஸா வைரஸை வைத்துதான் இத்தனை நாட்கள் ஆராய்ச்சிகள் நடந்தன. கொரோனா வைரஸ் கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே கேள்விப்படுகிறோம். ஆனால் இன்ப்ளூயன்ஸா வைரஸ்கள் 1918 ஆம் ஆண்டு அதாவது சுமார் 100 ஆண்டுகளாகவே ஆண்டுதோறும் நம்மை துரத்தி வருகின்றன. இந்த வைரஸால் நமக்கு தொற்று ஏற்படுவதும் அதற்கு எதிர்ப்பு சக்தி உருவாவதும் என இருக்கிறது. இது பழக்கப்பட்ட வைரஸ்தான். எனவே கொரோனா வைரஸ் அளவிற்கு நாம் பீதியடைய வேண்டாம்.

 சாதாரண காய்ச்சல்

சாதாரண காய்ச்சல்

கேள்வி: சாதாரண காய்ச்சலுக்கும் இன்ப்ளூயன்ஸா காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

பதில்: என்3என்2 வைரஸால் பாதிக்கப்படும் போது குழந்தைகளுக்கு 101 டிகிரிக்கு மேல் காய்ச்சலானது ஒரு நாளோ இரு நாட்களோ நீடிக்கிறது. காய்ச்சல் குணமானாலும் ஒரு வாரம் அல்லது இரு வாரங்களுக்கு வறட்டு இருமல், தொண்டை வலியும் நீடிக்கிறது. ஆனாலும் முறையான சிகிச்சை எடுத்து கொண்டால் போதும். குணமடைந்து விடலாம். இதற்கு மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்க வேண்டிய அவசியம் இல்லை.

 சீசனல் நோய்கள்

சீசனல் நோய்கள்

கேள்வி: இந்த வகை நோய் போல் இந்தியாவில் எந்தெந்த காலகட்டத்திற்கு எந்த மாதிரியான சீசனல் நோய்கள் வரும்?

பதில்: ஒரு வருடத்திற்கு இருமுறை வரும். ஒன்று குளிர்காலத்தில் வரும், இன்னொன்று வெயில் காலம் ஆரம்பிக்கும் போது வரும். சீசனல் வைரஸ்களில் இன்ப்ளூயன்ஸா, பழைய வகை கொரோனா வைரஸ், நுரையீரல் தொடர்பான வைரஸ் இவற்றை எல்லாம் கடந்துதான் நாம் வந்து கொண்டிருக்கிறோம்.

 சீசனல் ப்ளூ

சீசனல் ப்ளூ

கேள்வி: வரும் காலங்களில் இந்த வைரஸ்கள் இல்லாமல் வேறு ஏதேனும் சீசனல் ப்ளூ வர வாய்ப்பிருக்குமா?

பதில்: இந்த ப்ளூ வைரஸ்கள் ஆண்டுதோறும் ஏன் வருகிறது என்றால், இது ஆண்டுதோறும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இது ஒரு ஸ்பீசியஸிலிருந்து மற்றொரு ஸ்பீசியஸிற்கு மாறும்போதும் மாறும், அது போல் மனிதர்களுக்கிடையே பரவும் போது பல திரிபுகளை அடையும்.

சுகாதாரம்

சுகாதாரம்

கேள்வி: இந்த ஆண்டு சுகாதாரம் தொடர்பான பிரச்சினை ஏதேனும் வர வாய்ப்புகள் இருக்குமா?

பதில்: கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நீர் சத்து குறைபாடு ஏற்படும். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் முதியவர்கள், குழந்தைகள், இணைநோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் அதிகமாக வெளியே செல்லக் கூடாது. நீர் சத்தை பராமரிக்கும் உணவுகளான மோர், தயிர், இளநீர், கஞ்சி, பழச்சாறுகள் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

 வதந்தி

வதந்தி

கேள்வி: கொரோனா பரவிய போது நிறைய வதந்திகளும் மக்கள் மத்தியில் பரவியது. இந்த ஃப்ளூ வைரஸுக்கு எந்த மாதிரியான வதந்திகள் பரவுகிறது.

பதில்: இந்த வைரஸ் கொடூரமான வைரஸாக இருக்குமோ என மக்கள் கொரோனாவுடன் ஒப்பிடுகிறார்கள். கொரோனாவே பரவாயில்லை , இந்த ப்ளூ அதைவிட தீவிரமாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். அறிகுறிகள் தீவிரமாக இருப்பதால் இதை தீவிரமான வைரஸ் என கணக்கிட முடியாது. கொரோனா 2ஆவது அலையானது ஒரு ஆரோக்கியான இளைஞரை தாக்கி 10 நாட்களில் மரணத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ப்ளூ காய்ச்சல் அப்படி இல்லை. இது இணைநோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்போரை தாக்கும் போதுதான் சீரியஸாக ஆகிறது. எனவே இது குறித்த வதந்தியோ மூடநம்பிக்கையோ தேவையில்லை.

 புதிய பாதிப்பு வருமா?

புதிய பாதிப்பு வருமா?

கேள்வி: கொரோனா வைரஸ் பரவிக் கொண்டுதான் இருக்கிறது, இந்த நேரத்தில் ப்ளூவும் பரவுகிறது. எனவே இரண்டும் சேர்ந்து புதிய பாதிப்பை ஏற்படுத்துமா

பதில்: ஓமைக்ரான் வைரஸால் நாம் பாதிக்கப்பட்டாலும் அதற்குரிய நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு கிடைக்கிறது. ஓமைக்ரானுக்கு பிறகு தீவிரத்தை ஏற்படுத்தும் எந்த திரிபுகளும் உருவாகவில்லை. எனவே ஓமைக்ரான் வைரஸே இருக்கும் வரை நமக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. தொற்றாளர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்குமே தவிர மரண எண்ணிக்கை அதிகரிக்காது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில்தான் தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதிகரிக்கவில்லை. இந்த ப்ளூ வைரஸ் வருடா வருடம் தாக்கி அதன்பிறகுதான் எதிர்ப்பு சக்தி வரும். எனவே குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், முதியவர்களை பராமரிக்க வேண்டும்.

 முற்றுப்புள்ளி எப்போது ?

முற்றுப்புள்ளி எப்போது ?

கேள்வி: கொரோன வைரஸுக்கு முற்றுப்புள்ளி இருக்கிறதா?

பதில்: பன்றி காய்ச்சலை 2009 ஆம் ஆண்டு பேண்டமிக்காக அறிவித்தார்கள். அதன்பிறகு ஆண்டுதோறும் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு இருக்கிறது. அது போல் எச்3.என்2 குறித்த விழிப்புணர்வு இருக்கிறது. இவற்றை போல் கொரோனாவும் சீசனல் ப்ளூவாக மாற முயற்சிக்கிறது. அப்போது நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம்மை விட்டு போகாது, நம்முடன் இருக்கும். ஆனால் அச்சுறுத்தலை தரக் கூடியதாக இருக்காது. முகக் கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்த எச்3.என்2 காய்ச்சல் மார்ச் இறுதி வரை அல்லது ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இருக்கலாம் என ஐசிஎம்ஆர் கணித்துள்ளார்கள். எனவே அதுவரையாவது அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கலாம். நன்கு புரத சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளலாம். ப்ளூ தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இந்த தொற்று பாதிக்கப்பட்டால் மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், நெஞ்சு வலி, நெஞ்சு பாரமாக இருத்தல் ஆகியவை இருந்தால் ஆக்ஸிஜன் அளவு குறைபாடு இருக்கிறது என அர்த்தம். உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். சுய மருத்துவத்தை தவிர்த்து, நாட்களை கடத்தாமல் சரியான சிகிச்சை எடுத்தாலே மரண விகிதத்தை தடுக்கலாம். ஜன நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில்தான் இந்த ப்ளூ பரவும். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+