அனலை கக்கும் சூரியன்.. அதிகபட்சமாக நமது உடல் எவ்வளவு வெப்பத்தை தாங்குமாம் தெரியுமா?
சென்னை: நடப்பு ஆண்டில் வழக்கத்தை விட அதிகளவு வெப்பம் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்படி வெப்பம் அதிகரித்து வரும் சூழலில், நம் உடல் எவ்வளவு வெப்பத்தைத் தான் தாங்கும்? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். அது பற்றி இங்கே பார்க்கலாம்.
கோடைக்காலம் தொடங்கும் முன்பாகவே இந்த ஆண்டு சூரியன் அனலை கக்க தொடங்கியுள்ளது. வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் தான் வெயில் சுட்டெரிக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கியதில் இருந்தே வெயில் வெளுக்க தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் தற்போதே மே மாதம் தொடங்கிவிட்டதே என்று எண்ணும் அளவுக்கு வெயிலின் கொடூரம் உள்ளது.

வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள இளநீர், லெமன் ஜூஸ் என கடைகளை நோக்கி பகல் வேளைகளில் மக்கள் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். 11 மணிக்கு மேல் வெளியில் சென்றவர்கள் எல்லாம், வெயிலில் ஒருமுறை குளிக்கும் அளவுக்கு வியர்வை கொட்ட ஆரம்பித்துவிட்டது. வெயில் காலம் துவங்கும் போதே இப்படி என்றால், கத்திரி வெயிலில் தாக்கம் எப்படி இருக்குமோ? என மக்கள் தற்போதே விழி பிதுங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
3.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்தாலும்: இப்படி வெப்பம் அதிகரித்து வரும் சூழலில் நம் உடல் எவ்வளவு வெப்பத்தைத்தான் தாங்கும்? என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். அது பற்றி இங்கே பார்ப்போம்.. நம் உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். பாரபட்சமின்றி அனைத்து வயதினரையும் பாதிக்கும் விஷயம் இது. முப்பத்து ஏழு டிகிரி செல்சியசிற்கு மேல் 3.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்தாலும் உடல் சோர்விற்கான அறிகுறிகளை காட்டத்தொடங்கிவிடும்.

சுய வெப்பத்தை இழக்கும்: குளிர் சூழலில் தன் உடல் வெப்பநிலையை தக்கவைத்துக் கொள்ள போராடும் உடல், அதிவெப்ப சூழலில் தன் சுய வெப்பத்தை மெல்ல இழக்கும். வெப்பத்தினால் ரத்தம் விரிவாகி தோல் புறமுள்ள நரம்புகளில் வேகமாகப் பாயும். இதன் விளைவாக சிலரின் தோல் சிவப்பாக மாறும். அடுத்து உடலைக் குளிர்விக்க சுரக்கும் வியர்வை, வெளிச்சூழலில் ஈரப்பதமும், காற்றும் குறையும்போது அதிகமாகும்.

தலைவலி, குமட்டல், கிறுகிறுப்பு: ஓய்வில் குறைந்திருக்கும் உடல் வெப்பநிலை, உடல் தசைகள் இயங்கும்போது அதிகரிக்கத் தொடங்கும். எனவே வெப்பம் விளையாட்டு வீரர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எமனாகும் வாய்ப்பு அதிகம். வெயிலால் தலைவலி, குமட்டல், கிறுகிறுப்பு ஏற்படும்போது நிழலில் ஓய்வெடுத்து நீர் அருந்துவது நல்லது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருக்க நாளொன்றுக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
வெயில் காலத்தில் அதிக கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு நிறந்த உணவுகள் உட்கொள்வதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த உணவுகள் உடலில் அதிகளவு வெப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. அதேவேளையில், குளிர்ச்சியான நீர்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.












Click it and Unblock the Notifications