குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யவே கூடாது? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்
சென்னை: பிறந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்துவிட்டால் அந்த குழந்தையைவிட அதன் பெற்றோர்தான் மிகவும் அவதிப்படுவார்கள். பதற்றப்படுவார்கள். குழந்தைக்கு என்ன செய்ய வேண்டும், மருந்து கொடுத்தும் காய்ச்சல் குறையவில்லையே, ஒரு வேளை ஃபிட்ஸ் வந்துவிட்டால் என்ன செய்வது என்றெல்லாம் அவர்கள் யோசனை இருக்கும்.
பிறந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்துவிட்டால் முதலில் பெற்றோர் பதற்றப்படாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார், அதன்படி செயல்படுங்கள். எந்த பிரச்சினையும் வராது.

தேவையில்லாமல் நீங்களும் பதற்றமடைந்து மற்றவர்களையும் பதற்றப்படுத்தி, குழந்தைக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சையை கிடைக்கவிடாமல் செய்துவிடாதீர்கள். நீங்கள் அமைதியாக இருந்தால்தான் உங்களுடைய கவனிப்பு குழந்தைக்கு கிடைக்கும்.
காய்ச்சல் என்பது 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் போனால் குழந்தைக்கு 5 வயது வரை ஃபிட்ஸ் எனப்படும் வலிப்பு ஏற்படும். இது எல்லா குழந்தைகளுக்கும் வரும் என்றும் சொல்ல முடியாது, வராது என்றும் சொல்ல முடியாது. அத்தனை வெப்பத்தை குழந்தையால் தாங்க முடியாததால் வலிப்பு ஏற்பட்டு விடுகிறது.
எனவே குழந்தையின் காய்ச்சல் அளவு 100 டிகிரிக்கு மேல் போகவிடாமல் பார்த்துக் கொள்வது முக்கியமானது. அதற்கு குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது முக்கியம், இதற்கு முதலில் குழந்தையை போர்த்தி வைக்காதீர்கள். அந்த கதகதப்பு மேலும் வெப்பநிலையை கூட்டும். ஏசியோ ஃபேனையோ ஆஃப் செய்யாதீர்கள்.
அந்த வெப்பநிலையிலேயே குழந்தைகளின் உடலின் சூடு குறையும். அவ்வப்போது ஈரத்துணியால் துடைத்துவிடலாம். அப்போது வேண்டுமானால் குழந்தை குளிர்வதாக சொன்னால் ஃபேனையும் ஏசியையும் ஆஃப் செய்து விடுங்கள். பிறகு குழந்தைக்கு ஏதாவது சாப்பிட கொடுத்துவிட்டோ, பால் குடித்துவிட்டோதான் மருந்தை கொடுக்க வேண்டும் என காலத்தை தாழ்த்தாதீர்கள்.
வெறும் வயிற்றில் காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்து மிகவும் முக்கியமானது. எனவே மருந்து கொடுக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு உணவை திணிக்காதீர்கள். காய்ச்சல் இருக்கும் போது மல்டிவிட்டமின் டிராப்ஸ்களையும் மருந்துகளையும் நிறுத்தி வையுங்கள். அவர்களுக்கு முதலில் காய்ச்சல் குணமாக வேண்டுமே தவிர , கூடுதல் போஷாக்குகள் அல்ல!

குழந்தையின் வெப்பநிலையை தெர்மாமீட்டர் மூலம் செக் செய்யுங்கள். காய்ச்சல் வந்தாலே அவை ஆபத்தானவை என நினைக்காதீர்கள், சில காய்ச்சல்கள் சுற்றுச்சூழல் பிரச்சினை மற்றும் வாழ்வியல் காரணிகளாகும் வரலாம். காய்ச்சல் இருக்கும் குழந்தைக்கு இறுக்கமான ஆடைகளை அணிவிக்காதீர்கள்.
குழந்தை சோர்வடையாமல் இருக்க அவ்வப்போது ஓஆர்எஸ் திரவம் கொடுங்கள் (இதை பிறந்த குழந்தைக்கு தவிர்த்துவிடுங்கள்). குழந்தைக்கு வாந்தி, வியர்வை, சோர்வு, தலைவலி உள்ளிட்டவை ஏற்படுகிறதா என்பதை பாருங்கள். இந்த அறிகுறிகள் வந்துவிட்டால் உடனே உங்கள் குடும்ப நல மருத்துவரை அணுகுங்கள்.
டாக்டரின் அனுமதி இல்லாமல் தேவையற்ற மருந்துகளை கொடுக்காதீர்கள். மருத்துவமனையில் அவர் கொடுக்கும், பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே கொடுக்க வேண்டும். அது போல் குழந்தைகளுக்கு கிச்சடி, கஞ்சி, சூப், இட்லி, இடியாப்பம் உள்ளிட்ட எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு மருந்தையும் உணவையும் கொடுத்துவிட்டு நன்கு தூங்க வையுங்கள். தூங்கி எழுந்தால் கூட வெப்பநிலை குறைய வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை உங்கள் குழந்தைக்கு ஃபிட்ஸ் வந்து மருத்துவர் 100 டிகிரிக்கு மேல் போனால் காய்ச்சல் மருந்துடன் ஃபிட்ஸ் வராமல் இருக்க மருந்து கொடுத்தால் அதையும் மறக்காமல் கொடுத்துவிடுங்கள். 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து குறையாமல் காய்ச்சல் இருந்தால் ரத்த பரிசோதனை மேற்கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications