அண்ணே ரெண்டு பீரு கூலிங்கா! கோடை காலத்தில் பீர் குடிக்கலாமா? ’இந்த’ உண்மை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
சென்னை: கோடைக் காலத்தில் பீர் குடிப்பது குளுமைப்படுத்தும் என நம்புவது முட்டாள்தனமான விஷயம் எனவும், கோடையில் மது, சிகரெட்டை 100 சதவீதம் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் அது மரணம் வரை கொண்டு செல்லும் எனவும் கூறுகின்றனர்.
தற்போது கோடை வெயில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்து தேவைக்கும் குறைவாகவே பீர் பாட்டில்கள் விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மது பிரியர்கள், பீர் பாட்டில் கேட்டு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணியாளர்களுக்கு மதுப் பிரியர்களுக்கும் சண்டை கூட வருவதுண்டு..
வெயிலுக்கு பீர்: இந்த நிலையில் வெயிலுக்கு ஆல்கஹால் மற்றும் சிகரெட் பேராபத்து என மருத்துவர் சிவராமன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,”சிகரெட் ஆல்கஹால் வெயில் காலங்களில் பேராபத்து இரண்டும் உடலுக்கு வெம்மையை தரக்கூடியது உடல் சூட்டை அதிகரிக்க கூடியவை. ஆல்கஹால் சிகரெட் இரண்டுமே உடலை சூடுபடுத்தக் கூடியவை. தற்போது கோடைக்காலத்தில் அவற்றை பயன்படுத்தும் போது பெரும் கேட்டை ஏற்படுத்தும்.
பிரச்சினைகள்: மேலும் ஈரல் குடல் கல்லீரல் ஆகியவற்றை புண்ணாக்கும் தன்மையை ஏற்படுத்தும். 100% சமூகத்தில் தூக்கி எறியப்பட வேண்டிய ஒதுக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்று பார்க்கும்போது மது, புகை மற்றும் புகையிலை ஆகியவை இருக்கின்றன. கோடை காலம் குளிர் காலம் என்று இல்லாமல் எப்போதுமே அவற்றை விட்டு விலகி இருப்பது நல்லது. கோடை காலத்தில் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிலர் பீர் குடித்து வருகின்றனர்.

ஆல்கஹால்: கோடைக் காலத்தில் பீர் குடிப்பது குளுமைப்படுத்தும் என நம்புவது முட்டாள்தனமான விஷயம். சிறுநீர் அதிகமாக வெளியேறும் என்பதால் பீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும் என நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. உடலில் உள்ள நீரை அதிக அளவில் வெளியேற்றுவது பீர், சிறுநீரை உருவாக்கும் என்றாலும் அதிலும் ஆறு சதவீதம் முதல் 8 சதவீதம் வரை ஆல்கஹால் இருக்கிறது. அந்த ஆல்கஹால் ஈரலை பாதிக்கும்.
தொடவே கூடாது: ஈரலை பாதித்து அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதால் அது நன்மை என நினைப்பது மிகவும் முட்டாள்தனமானது. 100 சதவீதம் ஆல்கஹால் ஒதுக்கப்பட வேண்டும் அதுவும் கோடைகாலத்தில் அதனை தொடவே கூடாது என எச்சரித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் வெயில் நேரங்களில் மது குடிப்பது உடலில் உள்ள நீரை வியர்வை மூலம்வெளியேற்றி நீர் இழப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டு மரணம் வரை இட்டுச் செல்லும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications