காலையில் தூங்கி எழுந்ததும் நிம்மதியாக மலம் கழிக்க முடியலயா? இதை சாப்பிடுங்க!
சென்னை: உலகம் முழுவதும் உள்ள மக்களில் 2-30 சதவிகிதம் பேர் மலச்சிக்கல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த மலச்சிக்கலை கீரைகள் மூலம் எளியதாக சரி செய்யலாம்.
தமிழர் உணவு முறையானது வெறும் சத்துக்களை மட்டும் அடிப்படையாக கொண்டது கிடையாது. அது மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு இந்த மருந்துகள் சிறந்த தீர்வை கொடுக்கின்றன. அந்த வகையில் மனிதர்கள் தற்போது அதிகம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் முக்கியமானது மலச்சிக்கல். மலச்சிக்கலுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

உணவு முறை மாற்றமும் இந்த பிரச்னைக்கு பிரதான காரணமாகும். தற்போதைய காலத்தில் அவசர கதியில் கிடைப்பதை சாப்பிட்டு விட்டு வேலையை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதால் உணவு முறை குறித்து உரிய அக்கறை கொண்டிருப்பதில்லை. பரோட்டா, சிக்கன் ரைஸ், பர்கர், பீட்ஸா உள்ளிட்ட உணவுகளும் இந்த மலச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் சத்துக்களை உடல் உறிஞ்சிக்கொள்கிறது. மீதமிருக்கும் கழிவுகள் பெருங்குடல் வழியாக ஆசன வாயை அடைகிறது. அங்கு பெருங்குடல் கழிவில் இருக்கும் நீரை உறிஞ்சிக்கொள்கிறது. இந்த செயல் முறையில் அதிக அளவு நீர் உறிஞ்சப்படுவதால் மலம் இறுகி கெட்டியாகிவிடுகிறது. எனவே அதை வெளியேற்றும்போது கடுமையான வலி ஏற்படுகிறது. இதனால் மலம் கழிப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது.
இதனை சரி செய்ய கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக முளைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரை, முருங்கைக்கீரை போன்ற கீரைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை போக்க முடியும். முளைக்கீரையில் அதிக அளவு இரும்பு சத்தும், தாமிர சத்தும் அடங்கியிருக்கிறது. இது தவிர வைட்டமின் சத்துக்களும் அதிக அளவில் இருக்கிறது.
இது தவிர இக்கீரை பசியையும் தூண்டுவதால் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம். மேலும், ரத்த கொதிப்பு, பித்தம், உடல் சூட்டையும் இந்த கீரை சரிசெய்யும்.
அதேபோல பசலைக்கீரை சாப்பிடுவதால் மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை ஒழுக்கு போன்றவை நீங்கும். இந்த கீரையில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உடலுக்கு தேவையான தாது சத்துக்கள் கிடைக்கும். அதேபோல இது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் கொடுக்கப்படுகிறது. இந்த கீரையின் சிறப்பம்சமே மலமிலக்கும் தன்மைதான். அதேபோல சிறுநீரையும் அடிக்கடி வெளியேற்ற உதவும். இதன் மூலம் உடல் சூடு தணிக்கப்படுகிறது.
முளைக்கீரை, பசலைக்கீரை வரிசையில் மற்றொரு சிறப்பான கீரை வல்லாரையாகும். இந்த கீரை நியாபக சக்திக்காக பொதுவாக அறியப்பட்டாலும் இது தவிர பல்வேறு பலன்களை இந்த கீரை கொடுக்கிறது. இது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் ரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு இந்த கீரையை அதிக அளவில் கொடுக்கலாம். மூளை அயர்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளையும் இந்த கீரை போக்க உதவுகிறது.
இந்த வரிசையில் மற்றொரு சிறப்பான கீரை முருங்கைக்கீரை. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரையாக அறியப்படும் இந்த கீரை மிக எளிதாக கிடைக்கும் ஓர் சத்துமிக்க கீரையாகும். மூச்சுத்திணறல், இதர மூச்சு தொடர்பான பிரச்னைகளையும் இந்த கீரை சரி செய்கிறது. இதன் மற்றொரு சிறப்பான பணி கொழுப்பை குறைப்பதாகும். இந்த மூன்று கீரைகளுக்கும் இருக்கும் ஒரு அடிப்படை பண்பு மலச்சிக்கலை போக்குவதாகும். எனவே இந்த கீரைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் சரியாகும்.












Click it and Unblock the Notifications