இரவில் படுத்த உடன் தூக்கம் வரவில்லையா.. இந்த உணவை ட்ரை பண்ணி பாருங்க.. அடுத்த நொடியே தூங்கிடலாம்
சென்னை: இரவில் ஒருசிலர் படுத்த உடனேயே தூங்கி விடுவர். ஆனால் ஒருசிலர் தூக்கம் வராமல் தவிப்பார்கள். இப்படி தூக்கம் வராமல் தவிப்பவர்கள் கெமோமில் பால் உள்ளிட்ட சில பானங்களை குடிப்பதனால் நன்கு ஆழ்ந்து தூங்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அது என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
சிலருக்கு படுத்த உடன் தூக்கம் வந்துவிடும்.. ஆனால் ஒரு சிலரோ தூங்குவதற்கே பெரிய போராட்டம் நடத்திக் கொண்டு இருப்பார்கள். மனிதனுக்கு ஏழு மணி நேரம் முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்தது. சரியாக தூங்காவிட்டால் அன்றைய நாள் முழுவதுமே நம் உடலில் அதை உணர முடியும்.

உணவு பழக்கம்: சுறுசுறுப்பு இன்மை சோர்வு என தூக்கமின்மை உடலை வெகுவாக பாதிக்கும். இதனால் படுத்த உடனே தூங்குபவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என்று நாம் பேச்சு வாக்கில் சொல்வதுண்டு. தற்போதைய கால கட்டத்தில் இன்சோமேனியா எனப்படும் தூக்கமின்மை பிரச்சினை பலருக்கும் உள்ளது. இரவில் படுத்த உடனே தூக்கம் வராமல் இருக்க நமது உணவு பழக்க வழக்கமும் ஒரு காரணமாக உள்ளது.
இரவு தூங்க போகும் முன்பாக அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். அதேவேளையில், இரவில் தூக்கத்தை வரவழைக்க கூடிய சில பானங்கள் உள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்..
சூடான பால்: மிதமான சூட்டில் பால் குடிப்பது இரவில் ஆழ்ந்த உறக்கம் வருவதற்கு வழிவகுக்கும் என்று பிரபல ஆயுர்வேத மருத்துவவர் ஆஷ்தோஷ் கவுதம் கூறியுள்ளார். உடலில் தூக்கம் சரிவர வராமல் இருப்பதற்கு கால்சியம் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ளதாம். பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதுபோக செரோடோனினும் உள்ளது. இது மனதிற்கு அமைதியையும் ரிலாக்ஸ் உணர்வையும் கொடுக்கும்.
இளநீர்: உடலில் மேக்னீசியம் சத்து குறைவாக இருப்பது மன அழுத்தம் மற்றும் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்துமாம். 2006 ஆம் ஆண்டு வெளியான மெடிக்கல் ஹைபொதேசிஸ் என்ற மருத்துவ ஆய்விதழில் இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இளநீரில் மேக்னீசியம், பொட்டாசியம் நிறைந்து உள்ளது. எனவே இளநீரை பருகுவதன் மூலம் மன அழுத்தங்கள் குறையும். இது இரவில் கண்டதையும் போட்டு மனதை குழப்பிக்கொள்ள வைக்காமல் படுத்த உடனேயே ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்து செல்ல உதவுமாம்..
வாழைப்பழம், தேன்: முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தேவையன பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத்தை பொறுத்தவரை மேக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்களோடு டிரிபொடோன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது தூக்கத்தை தூண்டும். வாழைப்பழத்துடன் பால் மறும் சிறிதளவு சர்க்கரை அதோடு கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட்டால், சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதோடு உடலுக்கு நல்லது
பாதாம், குங்குமப்பூ பால்: பாதாம் பாலில் அபரிமிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது மன அழுத்தம் டென்ஷனை குறைக்க கூடியது. சூடான அல்லது குளிர்ந்த பாதாம் பாலில் சிறிய அளவு குங்குமப்பூ கலந்து குடிக்க்கலாம்.
கெமோமில் பால்: சாமந்தி பூ வகையைச் சேர்ந்த கெமோமில் (Chamomile) என்கிற பூ. கெமோமில் பூவானது எண்ணற்ற மருத்துவ பயன்களை நமக்கு தருகிறது. இந்த பூக்களை டீ-யில் பயன்படுத்துவதன் மூலம் ஏராளமாக நன்மைகளை பெற முடியும். கெமோமில் டீ குடிப்பது ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு தேவையற்ற பதற்றத்தை தணித்து ரிலாக்ஸாக இருக்க உதவுகிறது. மன அழுத்தத்தை குறைத்து ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
இந்த பரிந்துரைகள் எல்லாம் ஆழ்ந்த உறக்கத்திற்கான பொதுவான பரிந்துரைகள் மட்டுமே என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, தூக்கமின்மை பிரச்சினை அதிகமாக இருந்தால் உங்களின் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது ஆகும்.












Click it and Unblock the Notifications