மூளை பாதிக்குமாமே.. நைட் தூங்கும்போது செல்போன் பாக்கறீங்களா? உடல் எடையும் கூடும்.. இதோ சொல்லிட்டாங்க
வாஷிங்டன்: இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு செல்போனில் வீடியோ பார்த்தால் மூளை பாதிக்கும் என்று அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் பகீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.. இதே நிலை நீடித்தால் உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் என்றும் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளார்கள்.. இந்த தகவல் செல்போன் பிரியர்களுக்கு கிலியை தந்து வருகிறது.
ஒவ்வொருவரும், தினமும் 8 நேரத்திற்கு தூங்கும் பழக்கத்தை பழக்கப்படுத்திக் கொண்டாலே, ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.. நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், முதலில் சரியான நேரத்திற்கு தூங்குவதையும், அந்த தூங்கும் நேரத்தை ஒரே மாதிரியாகவும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒருநாள் 8 மணி நேரம், இன்னொரு நாள் 7 மணி நேரம் என தூங்கக்கூடாது.. அதேபோல ஒருநாள் 10 மணிக்கு, இன்னொரு நாள் 12 மணிக்கு தூங்க செல்லக்கூடாது.
எலக்ட்ரானிக் சாதனங்கள்
எப்போதுமே தூங்க செல்வதற்கு முன்பு, இரவில் பல் துலக்குவது, சருமத்தை பராமரித்து கொள்வது, தூங்குவதற்கு உண்டான வெப்பநிலையை சரி செய்து கொள்வது போன்றவைகள் ஆகும். இவைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தாலே, அது தூங்குவதற்கான நேரம் என்பதை நம்முடைய மூளை உணர்ந்து கொள்ளும்..
அதனால்தான், தூங்க செல்வதற்கு முன்பேயே கம்ப்யூட்டர், டிவி, செல்போன், டேப்லெட் இப்படி எல்லாவிதமான மின்சாதன பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த எலக்ட்ரிக் சாதனங்களிலிருந்து வெளியாகும், நீல ஒளியானது, நம்முடைய மூளையை களைப்படைய வைத்து, தூக்கத்தையும் கெடுத்துவிடும் என்று தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுறுத்தியபடியே உள்ளனர்.
புற்றுநோய் சங்க ஆராய்ச்சியாளர்கள்
அப்படியிருந்தும், பலரும் தங்களுக்கு தூக்கம் வரும்வரை, செல்போனை உபயோகித்து கொண்டேயிருக்கிறார்கள். இந்நிலையில்தான், அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் ஆராய்ச்சியாளர்கள், செல்போன்களை பயன்படுத்துவது தொடர்பாக சமீபத்திய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். செல்போன்களை அதிகமாக பயன்படுத்தும் மொத்தம் 1,22,000 பேரிடம் இந்த ஆய்வினை ஆராய்ச்சியாளர்கள் நடத்தியிருக்கிறார்கள்.
இவர்களில் 41 சதவீதம் பேர் தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு தங்கள் செல்போனை பயன்படுத்தும் நபர்களாகவும், 17.4 சதவீதம் பேர் அந்த நேரத்தில் தங்கள் செல்போனை பயன்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளனர். இந்த ஆய்வில் வெளியான தகவல் இதுதான்:
நினைவாற்றல், தூக்க கோளாறுகள்
"செல்போனை பயன்படுத்தாதவர்களை விட, பயன்படுத்தியவர்களுக்கு தூக்க பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு 33 சதவீதம் அதிகமாக இருந்தது. கண் பார்வைக்கான மெலடோனின் என்ற ஹார்மோன் தூக்கத்தையும் விழிப்பையும் சீராக்க உதவுகிறது.
செல்போன் அல்லது பிற டிஜிட்டல் ஸ்கிரீனிலிருந்து வெளியாகும் வெளிச்சம், மெலடோனின் வெளியீட்டை தாமதப்படுத்துகிறது. இதனால் இயற்கையான தூக்கம் பாதிக்கப்படுகிறது.
படுக்கைக்கு செல்வதற்கு முன்பு 30 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் செலவிடுவதால், தூக்க கோளாறுகள் மற்றும் அமைதியற்ற தூக்கத்தை அனுபவிக்கும் வாய்ப்பு 1.62 மடங்கு அதிகமாக இருக்கும். தூக்கமின்மை ஒரு நபரின் ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தினசரி வாழ்க்கையின் செயல்பாடு, நினைவாற்றல், உணர்ச்சி கட்டுப்பாடு மற்றும் கவனத்தை கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்களை பாதிக்கிறது.
மூளை பாதிப்பு
இதே நிலை நீடித்தால் உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு செல்போன்களில் வீடியோக்களை பார்த்துக் கொண்டு இருந்தால், வாரத்திற்கு சுமார் 50 நிமிட தூக்கத்தை இழக்க வேண்டியிருக்கும். இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களின் மூளையும் பாதிக்கப்படலாம். இந்த பழக்கமானது மனித உடலின் உயிரியல் கடிகாரத்தையே சீர்குலைத்துவிடும்" என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications