உச்சத்தில் மாரடைப்பு.. ஒரு மாதத்திற்கு முன்பே தோன்றும் அறிகுறிகள்.. இதையெல்லாம் மறக்காம கவனிங்க!
டெல்லி: நமது நாட்டில் மாரடைப்பு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுவாக மாரடைப்பு ஏற்படுவதற்குக் கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் அறிகுறிகள் தென்படும் என்பார்கள். ஆனால், சமீபத்தில் நடந்த ஆய்வில் மாரடைப்பிற்கு சில வாரங்களுக்கு முன்பே சில அறிகுறிகள் தென்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் மாரடைப்பு ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு அதிகம் ஏற்படும். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.

இளைஞர்கள், அவ்வளவு ஏன் குழந்தைகளுக்குக் கூட மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வாழ்க்கை மற்றும் உணவு முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
மாரடைப்பு: பொதுவாக மாரடைப்பு ஏற்படும் பொது கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் அறிகுறி தென்படும் என்பார்கள். இதன் காரணமாகவே அதைத் தக்க நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
ஆனால் மாரடைப்பிற்கான அறிகுறிகள் சில வாரங்களுக்கு முன்பே கூட தென்படத் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன் அறிகுறிகளைச் சரியாக நோட் செய்து தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்றாலே பாதிப்புகளைக் குறைக்கலாம்.
முக்கிய அறிகுறி: இதில் விவரிக்க முடியாத மார்பு வலி தான் மிகவும் முக்கியமான அறிகுறியாக இருக்கிறது. மாரடைப்பு ஏற்படுவோரின் சுமார் 68% பேருக்கு மார்பு வலி தான் முக்கியமான அறிகுறியாக இருக்கிறது. நெஞ்சு கனமாகத் தோன்றுவது, இதயம் படபடப்பது, மூச்சுத் திணறல், மார்பில் எரியும் உணர்வு, அசாதாரண சோர்வு, தூக்கப் பிரச்சனைகள் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
பொதுவாக இதய தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. இதில் பகுதி அடைப்பு இருப்போருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த அறிகுறிகள் தென்படும். அதேநேரம் தமனியில் முழு அடைப்பு இருந்தால் ஒரு மாதம் அல்லது அதற்கும் முன்பு கூட அறிகுறிகள் ஏற்படும்.
பெண்கள்: மாரடைப்பைப் பொறுத்தவரைப் பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. அதேநேரம் மாரடைப்பு ஏற்பட்ட ஒரே ஆண்டில் பெண்கள் உயிரிழக்கவும் வாய்ப்புகள் அதிகம். மேலும், ஆண்களை விடப் பெண்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதர அறிகுறிகள்: மார்பு வலி என்பது ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் மிகவும் பொதுவாக இருக்கும் அறிகுறியாக இருக்கிறது. அதேநேரம் பெண்களுக்கு வேறு சில கூடுதல் அறிகுறிகளும் தென்படுகிறது. குறிப்பாகத் தூக்கப் பிரச்சனைகள், கவலை, சோர்வு, மூச்சுத் திணறல், குமட்டல் அல்லது வாந்தி, முதுகு அல்லது தாடை வலி ஆகியவை பெண்களுக்கு முக்கியமான அறிகுறிகளாக உள்ளன. இந்த அறிகுறிகளைச் சரியாகக் கண்டறிந்து உரியச் சிகிச்சை பெற வேண்டும் என்பதே வல்லுநர்கள் கருத்தாக இருக்கிறது.
இது ஒரு சாதாரண செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications