பழனி கோவில் நில மோசடி.. வசமாய் சிக்கிய திமுக புள்ளி! சாட்சி கையெழுத்துப் போட்டதே அவர் தானாம்! பரபர!
திண்டுக்கல்: பழனி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தங்களது 3 நாள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக இந்த விவகாரத்தில் திமுக நிர்வாகி சிக்கியுள்ளார். பழனி அருகே டி.கே.என். புதூரில் உள்ள நிலத்தை வாங்கிய சேதுபதி வீடு மற்றும் இந்த நிலப் பரிமாற்றத்திற்குச் சாட்சி கையொப்பமிட்ட திமுக 27-வது வார்டு செயலாளர் லட்சுமணன் ஆகியோரது வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனையிலும் விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருந்த 1 ஏக்கர் 40 சென்ட் தர்ம சாசன நிலத்தை, நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோடிக்குச் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக போலீசார் முதலில் விசாரித்த இந்த வழக்கை, தற்போது சிபிசிஐடி போலீசார் தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன் தினம் முதல் நாள் விசாரணையின் போது, தேவஸ்தான தலைமை அலுவலகம், மோசடி நடந்த நிலம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் அதிரடிச் சோதனைகளை நடத்திப் புதிய எப்.ஐ.ஆரைப் பதிவு செய்தனர்.
பழனி கோவில் நிலம்
அதன் தொடர்ச்சியாக, நேற்று 2-ஆம் நாள் விசாரணையின் ஒரு பகுதியாகப் பழனி கோயில் அதிகாரிகள் மற்றும் முக்கிய அலுவலர்களை திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடுத்தகட்ட அதிரடி நகர்வாக, சிபிசிஐடி தனிப்படையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் புகுந்தனர்.
சிபிசிஐடி
சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த 5 அதிகாரிகளில், இந்த மோசடிப் பத்திரப்பதிவு தொடர்பான முக்கிய அசல் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை 2 போலீசார் தங்களது வசம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலகத்தில் முகாமிட்ட மீதமுள்ள 3 சிபிசிஐடி அதிகாரிகள் அங்குள்ள சார்பதிவாளர் அலுவலக அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஜஸ்டின் மணிகண்டன்
கடந்த ஜூலை 6-ஆம் தேதி, தற்காலிகப் பொறுப்பு சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன் இந்தச் சட்டவிரோதப் பதிவை மேற்கொண்ட போது, அலுவலகத்திற்கு வந்தவர்கள் யார், அவர்களுக்குத் துணையாக இருந்த ஊழியர்கள் யார் என்பதைத் கண்டறிய, சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளையும் சிபிசிஐடி அதிகாரிகள் தற்பொழுது ஆய்வு செய்தனர். இந்த நிலையில் அடுத்த அதிரடி நடவடிக்கையாக நிலத்தை முறைகேடாக பதிவு செய்த ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர விசாரணை
அதேபோல நெல்லை பகுதியிலும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பழனி கோவில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்து வாங்கிய சேதுபதியை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவரது வீட்டில் தற்போது சோதனையானது நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக திமுக நிர்வாகிக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது நிலத்தை வாங்கிய சேதுபதிக்கு சாட்சியாக திமுக பிரமுகர் தான் கையெழுத்து போட்டு இருக்கிறார் .
திமுக பிரமுகர்
பழனி அருகே டிகேஎன் புதூரில் கோவில் நிலத்தை வாங்கிய சேதுபதியின் வீடு மற்றும் அந்த நிலப்பரிமாற்றத்திற்கு சாட்சி கையொப்பமிட்டதாக திமுக 27ஆவது வார்டு செயலாளர் லட்சுமணன் ஆகியோர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒரே நாளில் திண்டுக்கல், பழனி, நெல்லை என பல்வேறு பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக களமிறங்கி இருக்கும் நிலையில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தவெக மீது புகார்
அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு மீது திமுக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், மோசடிக்கு திமுக பிரமுகரே உடந்தையாக இருந்ததாக வெளியாகி உள்ள தகவல் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications