விசிலடித்தால் உடனே வரும் பறவை.. தேன் இருக்கும் இடத்தை துல்லியமாக காட்டும் அதிசயம்!
சென்னை: இயற்கை என்பது எப்போதுமே மனிதர்களால் கணிக்க முடியாத பல மர்மங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.. காட்டில் வாழும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே பகைதான் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் ஆப்பிரிக்காவின் சில அடர்ந்த காடுகளில் "ஹனி கைடு" (Honeyguide) என்று அழைக்கப்படும் ஒரு விசித்திரமான பறவை மனிதர்களுடன் கூட்டணி வைத்து தேன் வேட்டையில் ஈடுபடும் அதிசயம் நடந்து வருகிறது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
Honeyguide என்ற பறவை சாதாரணமாக மற்ற பறவைகளைப் போல உணவு தேடுவது இல்லை.. அது நேராக மனிதர்களைத் தேடி வந்து, ஒரு குறிப்பிட்ட சத்தம் மூலம் அவர்களின் கவனத்தை ஈர்க்கிறது.. இப்படியொரு பறவையை யாருமே முதலில் கண்டுகொள்ள மாட்டார்களாம்.. ஆனால் அந்தப் பறவையைப் பின்தொடர்ந்தால் தான் அதன் உண்மையான நோக்கம் என்ன என்பது புரியும்.

ஆப்பிரிக்கா பறவை
ஆப்பிரிக்காவின் பழங்குடி மக்களுக்கும் இந்தப் பறவைக்கும் இடையே ஒரு ஆச்சரியமான நட்பு பல 100 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.. இந்த பறவை நேராக தேன் கூடு இருக்கும் இடத்துக்கு மனிதர்களை அழைத்து செல்லுமாம்..
அடர்ந்த காடுகளில் உள்ள மரங்களில் மிக உயரமாக இருக்கும் தேன் கூட்டுகளை மனிதர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.. ஆனால் இந்தப் பறவை அதனைத் துல்லியமாக அறிந்து மனிதர்களுக்கு வழி காட்டுகிறது.. மனிதர்கள் அந்த பறவையைப் பின்தொடர்ந்து 1 கிலோமீட்டர் தூரம் வரை கூடச் செல்கிறார்கள்.. தேன் கூடு இருக்கும் மரத்தை அடைந்ததும் அந்தப் பறவை ஒரு குறிப்பிட்ட ஒலியை எழுப்பி அங்கேயே உட்கார்ந்து கொள்ளுமாம்.
பழங்குடி மக்களுக்கு உதவி
இந்த உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல இந்தப் பறவைக்குத் தேன் மெழுகு மற்றும் தேனீக்களின் லார்வாக்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.. ஆனால் தேன் கூட்டைத் தனியாக உடைத்து அதில் உள்ள மெழுகை எடுக்கும் வலிமை இந்தப் பறவைக்குக் கிடையாது.
அதே நேரத்தில் மனிதர்களுக்கு அடர்ந்த காட்டில் தேன் கூட்டைத் தேடிக் கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது.. இதைச் சமாளிக்க இயற்கையே இந்த அதிசய கூட்டணியை உருவாக்கியுள்ளது.. மனிதர்கள் புகையை போட்டு தேனீக்களை விரட்டிவிட்டுத் தேனை எடுத்துக்கொள்கிறார்கள்.. தேனை எடுத்த பிறகு மீதமுள்ள தேன் மெழுகு மற்றும் லார்வாக்களை அந்த பறவைக்காக அங்கேயே விட்டு சென்றுவிடுவார்களாம்.
தேன் கூட்டை காட்டித் தரும்
அதேபோல இந்த பறவை, மனிதனை அழைக்கும் விதமும் மிகவும் சுவாரஸ்யமானது.. அது ஒரு தனித்துவமான குரல் எழுப்பி, அருகில் உள்ளவர்களை ஈர்க்குமாம்.
மனிதன் அதைப் பின்தொடர ஆரம்பித்தவுடன், அது இடைவிடாமல் முன் போய் திரும்பிப் பார்த்து வழி காட்டும்.. மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் இடையே நடக்கும் இந்தத் தகவல் பரிமாற்றம் அறிவியலாளர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.. இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல.. மனிதனுக்கும் ஒரு பறவைக்கும் இடையே உருவான அரிய புரிதல் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்..
நம்ப முடியாத அதிசயம்
இப்படி, இயற்கை சில நேரங்களில் மனிதனை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் செயல்படுகிறது.. அந்தப் பறவைக்குத் தெரியும் மனிதர்கள் வந்தால் மட்டுமே தமக்கு உணவு கிடைக்கும் என்று.. அதேபோல மனிதர்களுக்கும் தெரியும் இந்தப் பறவை வழிகாட்டினால் மட்டுமே காட்டின் ஆழத்தில் இருக்கும் தேன் கூட்டை கண்டுபிடிக்க முடியும் என்று..
இந்தப் பறவையின் அறிவாற்றல் மற்றும் மனிதர்களுடனான அதன் நெருக்கம் குறித்த செய்திகள் பலமுறை சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. எந்த மொழியும் இல்லாமல், ஒருவருக்கொருவர் தேவையைப் புரிந்து கொண்டு செயல்படுவது இந்தக் கூட்டணியின் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம்.. இதே போன்ற பல விசித்திரமான விலங்கு உண்மைகள் இன்னும் காடுகளுக்குள் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றன..!!












Click it and Unblock the Notifications