சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 1,200 டிரைவர், கண்டக்டர் வேலை.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 1,200 டிரைவர், கண்டக்டர்கள் நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இது தொடர்பான அறிவிப்பினை எம்டிசி வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் கோட்டம் சார்பில் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய பஸ்கள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு புதிய பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த அ தி மு க ஆட்சியில் புதிய டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்படவில்லை.

ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி விட்டனர். சுமார் 2 ஆயிரம் வழித்தடங்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் போக்குவரத்து கழகம் கடுமையான நிதிச்சுமையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. தற்போது திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்து கழகம் புத்துயிர் பெறு வருகிறது. டிரைவர், கண்டக்டர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார்.
அமைச்சர் சிவசங்கர் இப்படி கூறும் அதே வேளையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள் , தனியார் நிறுவனங்கள் மூலம் நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டிரைவர் மற்றும் கண்டக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எனினும் இது தற்காலிக தீர்வுதான் என்றும், நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படும் போது, ஒப்பந்த தொழிலாளர்கள் நிறுத்தி கொள்ளப்படுவார்கள் என்றும் அரசு கடந்த முறை விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒப்பந்த பணியாளர்களை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி படிவங்களை கோரியுள்ளது. 700 டிரைவர்கள், 500 கண்டக்டர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தம் கோரப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களை இயக்க டிரைவர், கண்டக்டர்களை பணிக்கு அமர்த்த தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒப்பந்த புள்ளி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் சார்பில் 700 டிரைவர்கள், 500 கண்டக்டர்களை பணிக்கு அனுப்ப வேண்டும். டிரைவர்களுக்கு ரூ,27,934, கண்டக்டர்களுக்கு ரூ,27,597 குறைந்தபட்ச ஊதியம், பி.எப்., இ.எஸ்.ஐ. உள்ளிட்டவை வழங்க வேண்டும். 11 மாதங்கள் முதல்கட்ட ஒப்பந்த காலமாகும். ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்டு 28-ம் தேதி பிற்பகல் 2 30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எம்டிசியின் இந்த அறிவிப்பிற்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications