அங்கன்வாடியில் வேலை..தமிழகம் முழுக்க 7,783 பணியிடங்கள்..10,12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் என மூன்று பதவிகளுக்கு ஆட்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ. 24,400 சம்பளம் வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின்(ICDS) கீழ் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்கான பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் மொத்தம் 7,783 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
* அங்கன்வாடி பணியாளர் - 3,886 பணியிடங்கள்.
* குறு / மினி அங்கன்வாடி பணியாளர் - 305 பணியிடங்கள்.
* அங்கன்வாடி உதவியாளர் - 3,592 பணியிடங்கள் என மொத்தம் 7,783 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி: கல்வித் தகுதியை பொறுத்தவரை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பதவிகளுக்கு 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.
சம்பளம் எவ்வளவு?:
* அங்கன்வாடி பணியாளர் - மாதம் ரூ.7,700 - 24,200/-
* குறு / மினி அங்கன்வாடி பணியாளர் - மாதம் ரூ.5,700 - 18,000/-
* அங்கன்வாடி உதவியாளர் - மாதம் ரூ.4,100 - 12,500/-
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 25 வயது நிரம்பியவர்களாகவும், 35 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பெண்கள் என்றால் 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். விதவை, கணவரை பிரிந்து வாழும் பெண்கள், எஸ்சி / எஸ்டி உள்ளிட்ட பெண்கள் என்றால் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பொது பிரிவினர் என்றால் 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். விதவை, கணவரை பிரிந்து வாழும் பெண்கள் என்றால் 20 - 45 வயதுக்கு உட்பட்டவராகவும், மாற்றுத்திறனாளி பெண்கள் என்றால் 20 - 43 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை எப்படி?: இந்த பணியிடங்களுக்கு தேர்வு எதுவும் கிடையாது. நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும். மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில், மாவட்ட திட்ட அலுவலகர் நேர்காணல் மூலமாக தகுதியான தேர்வர்களை தேர்வு செய்வார்.
யார் யார் விண்ணப்பிக்க முடியும்: இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆண்கள் விண்ணப்பிக்க முடியாது. எந்த ஊரில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அந்தந்த பஞ்சாயத்து, நகரப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதேபோன்று விதவை பெண்களுக்கு மட்டும் 25 சதவிகித முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://icds.tn.gov.in/icdstn/index_Tamil.html#












Click it and Unblock the Notifications