அடடே.. லுலு மால் வாசலில் காத்திருப்பது யாரு பாருங்க.. வியந்துபோன மக்கள்!
திருவனந்தபுரம்: வயது என்பது வெறும் எண் என்பதை நிரூபித்துள்ள 70 வயதாகும் கேரளாவைச் சேர்ந்த ரஷீத் என்பவர், லுலு குழுமத்தில் புதிய அத்தியாயத்தை எழுதும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
குறிப்பாக, லுலு குழுமத்தின் கொச்சி பிராந்திய மேலாளர் அனூப், ரஷீதை பாராட்டி, அவரை திருவனந்தபுரம் மாலில் நேரில் சந்திக்க அழைத்தார். 'நான் அமர்ந்த பின்பே லுலு நிர்வாகிகள் தங்கள் சீட்டில் அமர்ந்தார்கள்,' என ரஷீத் நிருபர்களிடம் உற்சாகமாக கூறி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அப்படி ரஷீத் செய்த சாதனைதான் என்ன.. ஏன் அவர் கொண்டாடப்பட்டார்.. ஏன் கேரளாவின் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளார் ரஷீத்.. விஷயம் இதுதான் பாருங்க..

லுலு மால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க பிரபலமாகி வருகிறது. திருவனந்தபுரத்திலுல்ள லுலு மால், மொத்தம் 2,000,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பிரமாண்ட மால் ஆகும். இது இந்தியாவின் மிகப்பெரிய மால் என்ற பெருமை பெற்றது. இங்கு நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 70 வயதான ஒருவர் பங்கேற்று ஆச்சரியம் ஏற்படுத்தினார். 'இந்த வயதில் வேலை தேடுவது தேவையா?' என்ற கேள்விக்கு பதிலாக, 'வயது ஒரு தடையல்ல, ஆர்வம்தான் முக்கியம்' என்ற உண்மையை ரஷீத் நிரூபித்துள்ளார். அதற்குத்தான் இந்த பாராட்டும், குதூகலமும்.
திருவனந்தபுரத்தில் நடந்த லுலு குழுமத்தின் வேலைவாய்ப்பு நேர்காணலில் கலந்து கொண்ட ரஷீத் என்ற அந்த முதியவர், தனது தன்னம்பிக்கையால் அனைவரையும் கவர்ந்தார். 5000 பேர் வந்திருந்த அந்த வேலைவாய்ப்பு முகாமில் ரஷீத்தான் வயதில் மூத்தவர். மற்றவர்கள் அனைவரும் இளைஞர்களாகும்.
'லுலு குழுமத்தில் பணிபுரிவோர் மிகவும் திறமையானவர்கள். ஒரு வாரத்தில் உங்களுக்கு வேலை பற்றிய தகவலை தருவோம்,' என்று அதிகாரிகள் சொல்ல, ரஷீத் அந்த பதிலுக்காக ஆவலோடு காத்திருக்கிறார். 'நான் வேலைக்கு வந்தது தவறில்லை. இறக்கும் முன்பு லுலு குழுமத்தின் தலைவர் யூசஃப்அலியையும் சந்திக்க வேண்டும்' என தனது விருப்பத்தை வெளிப்படுத்திய ரஷீத், 'எனக்குப் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே என் ஆசை,' என முகம் மலர கூறினார்."
38 ஆண்டுகள் வெளிநாட்டில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ரஷீத், இந்த வயதிலும் பணிபுரிய வேண்டும் என்ற தீவிர ஆசையுடன் இருக்கிறார். "பத்து பைசான்னாலும் அது நாம சம்பாதித்ததாக இருக்க வேண்டும். அதற்கு வேலை தேவை" என்று அவர் ஆர்வத்தோடு தெரிவித்தார். இது சரிதானா, அல்லது ஒரு இளைஞரின் வேலை வாய்ப்பை ரஷீத் பறிக்கிறாரா என்ற இருவகை வாதங்கள் கேரள சோஷியல் மீடியாக்களில் அனல் பறக்கின்றன.












Click it and Unblock the Notifications