ரூ.78 கோடிக்கு அதிபதி! வாழ்க்கையை மாற்றிய மகளின் பிறந்த தேதி! கேரள டெக்னீஷியனுக்கு லாட்டரியால் யோகம்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்து வரும் கேரளாவை சேர்ந்த சுனில் குமார் என்பவருக்கு அபுதாபி பிக் லாட்டரியில் சுமார் 78 கோடி ரூபாய் பரிசாக அடித்துள்ளது. ஓவர் நைட்டில் வாழ்க்கையே மாறிப் போனதால் சந்தோஷத்தில் திளைத்து வருகிறார் சுனில் குமார். திருமணம் ஆகி 12 ஆண்டுகளுக்கு பிறகு, பிறந்த தன் மகள் பிறந்த தேதியில் வாங்கிய லாட்டரிக்கு தான் இந்த அதிர்ஷ்டம் அடித்ததாகவும், எனது மகளின் பிறந்த தேதி என் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மீண்டும் ஒரு முறை மாற்றியுள்ளது" என எமோஷனலாக தெரிவித்துள்ளார்.
கேராளாவை சேர்ந்தவர் சுனில் குமார் சதாசிவன். அபுதாபியில் டெக்னிஷியனாக வேலை பார்த்து வருகிறார். வயிற்று பிழைப்புக்காக கடல் கடந்து சென்று வேலை பார்த்து வந்த சுனில் குமார் தனது வேலையில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார். 52 வயதான சுனில் குமாருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். சதாசிவனுக்கு அவ்வப்போது லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.

அபுதாபி லாட்டரி டிக்கெட்
பல கோடி ரூபாய்களை முதல் பரிசாக கொண்ட அபுதாபி லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். லாட்டரி டிக்கெட் வாங்கும் போது தனது மகள், மனைவி மற்றும் தன்னுடைய பிறந்த தேதியை அடிப்படையாக கொண்ட எண்ணை தேர்வு செய்து சதாசிவம் வாங்கியிருக்கிறார். சதாசிவனின் இந்த நம்பிக்கை வீண் போகவில்லை. பல வருடங்களாக லாட்டரி வாங்கி ஏமாற்றமே சந்தித்த அவருக்கு இந்த லாட்டரியில் அதிர்ஷ்ட மழை கொட்டியுள்ளது.
78 கோடி ரூபாய் பரிசு
இரண்டாவது பரிசாக 30 மில்லியன் திர்ஹாம் அடித்தது. இந்திய மதிப்பில் சுமார் 78 கோடி ரூபாய் இதன் மதிப்பு வரும். 260701 என்ற எண்ணிற்கு பரிசு அடித்துள்ளது. இதனை ஐக்கிய அரபு அமீரக லாட்டரியும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு சதாசிவனுக்கு வாழ்த்து கூறியுள்ளது. பரிசு வென்றது பற்றி நெகிழ்ச்சியுடன் பேசிய சதாசிவன் கூறியதாவது:-
லாட்டரி குலுக்கல் நடைபெறும் நாள் அன்று 100 திர்ஹாமாவது தனக்கு பரிசு அடிக்கும் என்ற நம்பிக்கையில் போனை எடுத்து செக் செய்தேன். ஆனால் வியக்கும்படியாக 30 மில்லியன் திர்ஹாம் ஜாக்பாட் அடித்தது. வெற்றி பெற்றதை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் உறைந்தேன். எனது மனைவிக்கு உடனடியாக போன் செய்து இந்த விஷயத்தை சொன்னேன். ஆனால் முதலில் நம்பாத என் மனைவி, உண்மையத்தான் சொல்றீங்களா? என்றார்.
மகளின் பிறந்த தேதி
பின்னர் வீடியோ கால் போட்டு உறுதி செய்தேன்.திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் கழித்தே எனக்கு மகள் பிறந்தாள். எனது மகளின் பிறந்த தேதி என் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக மீண்டும் ஒரு முறை மாற்றியுள்ளது. மகளின் கல்வி செலவுக்காக இந்த தொகையை செலவிட திட்டமிட்டுள்ளேன். இளம் வயதில் இருந்தே கடுமையாக உழைத்துவிட்டேன். இனி கொஞ்சம் இளைப்பாறலாம். இந்த பரிசுத்தொகையை வைத்து ஊரில் சிறிய அளவில் தொழில் ஒன்றை தொடங்கலாம் என்று இருக்கிறேன்.
பரிசுத்தொகையில் குறிப்பிட்ட அளவு பணத்தை எனது சமூகத்திற்காகவும் செலவிட திட்டமிட்டு இருக்கிறேன். எனது வீட்டை கொஞ்சம் மேம்படுத்த வேண்டும். வீடில்லாத மக்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க விரும்புகிறேன்" என்றார். சதாசிவனுக்கு இரண்டாவது பரிசு அடித்த நிலையில், முதல் பரிசு நேபாளத்தை சேர்ந்த செக்யூரிட்டி ஒருவருக்கு அடித்ததாம். ஓவர் நைட்டில் வாழ்க்கையே மாறிவிட்டதே என்று நினைத்து எல்லையில்லா மகிழ்ச்சியில் சதாசிவன் திளைத்து வருகிறார்.















Click it and Unblock the Notifications