அரசு வேலையில் இப்படி சேர்ந்தது இத்தனை பேரா.. டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோரை அசரவைத்த கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 1.4.2023 முதல் 31.3.2024 வரை நடத்தப்பட்ட போட்டி தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள், அதில் பங்கேற்றவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. இங்கு பயிற்சி தேர்வுகளில் பங்கேற்ற 82 பேருக்கு அரசு பணிகள் கிடைத்துள்ளது என மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜெரிபா இம்மானுவேல் கூறினார்.
வேலைவாய்ப்பின்மை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இந்தியாவில் இருக்கிறது. வேலை தேடி பலர் மாநிலம் விட்டு மாநிலம் செல்கிறார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்கிறார்கள். வெறும் 120000 சம்பளத்திற்காக 2000, 2500 கிமீ தூரம் தள்ளியிருந்து கோவைக்கும், சென்னைக்கும் பலர் வேலை தேடிவருபவர்கள் அதிகம். தமிழ்நாட்டிலுமே கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, தஞ்சை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் போதிய வேலைகிடைக்காத காரணத்தால் சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்கிறார்கள்.

அரசு வேலையை பொறுத்தவரை மிகவும் குறைவான நபர்களுக்கே கிடைக்கும். அதற்கே கடும் போட்டி இருக்கும்.. தற்போதைய நிலையில் அரசுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தனியார் வேலையைவிட அரசு வேலையில் சேருவதற்கு படித்த இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். வேலை கிடைக்காதவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதம் வரை ஓராண்டில் 2,853 பேருக்கு அரசால் ரூ.1 கோடியே 41 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 1.4.2023 முதல் 31.3.2024 வரை நடத்தப்பட்ட போட்டி தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகள், அதில் பங்கேற்றவர்களின் விவரங்கள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஜெரிபா இம்மானுவேல் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறும் போது, "நாகர்கோவில் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த ஓராண்டில் குரூப்- 1, 2, 4 மற்றும் டெட் தேர்வு, வங்கி தேர்வு, ரயில்வே, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு மற்றும் மத்திய அரசின் தேர்வுகள் என மொத்தம் 76 மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்ட அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் மொத்தம் 456 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மாநில மற்றும் மத்திய அரசின் தேர்வுகளான குரூப்-1 தேர்வில் 4 பேரும், குரூப்-4 தேர்வில் 20 பேரும், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 10 பேர், குரூப்-2 (மெயின்) தேர்வில் 20 பேர் உள்பட 82 பேர் அரசு தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ளார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications