டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறுகிறது.. எப்படி இருக்கும் தெரியுமா? விவரம்
சென்னை: குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு ஜனவரி மாதம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் எஸ்.கே.பிரபாகர் அறிவித்துள்ளார். குரூப் 4 பணியிடங்களுக்கு தகுதிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியலை கொண்டு கலந்தாய்வு நடைபெறு போகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, தமிழக அரசு பணியில் அதிக வேலைவாய்ப்பை தரும் குரூப் 4 பணியிடங்களை ஒவ்வொரு ஆண்டும் நிரப்புவது வழக்கம். அந்த வகையில் குரூப்-4 காலி பணியிடங்களான, கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளர்க் - 3, தனிச் செயலாளர், இளநிலை நிர்வாகி, பால் பதிவாளர், ஆய்வக உதவியாளர், பில் கலெக்டர், தொழிற்சாலை மூத்த உதவியாளர், வனப் பாதுகாவலர், இளநிலை ஆய்வாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பிக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், கடந்த ஜூன் 9ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 15 லட்சத்து 91 ஆயிரத்து 659 பேர் தேர்வு எழுதினர்.

பொதுவாக குரூப் 4 தேர்வு காலிபணியிடங்கள் அறிவிக்கும் போது குறைவாகவும், தேர்வுக்கு பின்னர் கூடுதல் பணியிடங்களும் நிரப்பப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் 6 ஆயிரத்து 244 குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில், செப்டம்பர் மாதம் கூடுதலாக 480 பணியிடங்கள் அரசால் சேர்க்கப்பட்டது. இதனிடையே பல ஊர்களில் காலி பணியிடங்கள் உள்ளதால், பணியிடங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினார்கள். இதையடுத்து அக்டோபர் 9ஆம் தேதி கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்களை சேர்த்து அறிவித்துள்ளது.
அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் 400, இளநிலை உதவியாளர் பிணையற்றது 3 ஆயிரத்து 458, இளநிலை உதவியாளர் பிணை உள்ளது 69, பில் கலெக்டர் 99, தட்டச்சர் 2 ஆயிரத்து 360, சுருக்கெழுத்தர் நிலை 3 ல் 642, இளநிலை உதவியாளர் வக்பு வாரியம் 32, சுருக்கெழுத்தர் நிலை 3, தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு இணையம், கூட்டுறவு நிறுவனங்களில் 17, தடயவியல் துறையில் 32, வனத்துறையில் 216, வீட்டுவசதி வாரியம் 22 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 28 ந் தேதி https://tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in ஆகிய இணையதளங்களில் வெளியானது. இதேபோல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு சான்றிதழ்களை சமர்பித்தவர்கள் அளித்த விவரத்தின் அடிப்படையில் அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் முடிந்த பின்னர் 2025 ஜனவரி மாதம் கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
குரூப் 4 கலந்தாய்வு எப்படி இருக்கும் : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு சான்றிதழ்களை சமர்பித்தவர்கள் அளித்த விவரத்தின் அடிப்படையில் அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் முடிந்த பின்னர் அவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு சில பேருக்கு தரவரிசை மாறுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. முதல் நாளில் முதல் 200 பேரையும், அடுத்த நாட்களில் அடுத்தடுத்த 200 பேரையும் அழைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி செல்லும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு தாமதமாக செல்லக்கூடாது.
சிவி அப்லோட் செய்த அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களையும் அத்துடன் நகல்களையும் எடுத்து செல்ல வேண்டும். உங்களுடைய மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை எடுத்து செல்ல வேண்டும். 10ம் வகுப்பு சான்றிதழ், 12ம் வகுப்பு சான்றிதழ், டிகிரி பிரொவிசனல் சர்ட்டிபிகேட், சாதி சான்றிதழ், தமிழ் வழியில் (ஒன்று முதல் 10 வரை) படித்ததற்கான சான்றிதழ், சிறப்பு கேட்டகிரி என்றால் அதற்கு சான்றிதழ்களை எடுத்து செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications