தென்னாற்காடு ஜில்லாவில் சூப்பர் சம்பவம்.. விழுப்புரத்தில் தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பூங்கா
விழுப்புரம்: விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பூங்காவை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன் காரணமாக சென்னையை தாண்டி மற்ற நகரங்களிலும் ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் வளர்ந்து வேலைவாய்ப்பு பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னையில் மட்டும் ஐடி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதன் காரணமாக ஏராளமானோர் சென்னைக்கு புலம் பெயர்ந்து வந்து வேலை செய்கிறார்கள். தமிழ்நாட்டில் எங்கு என்ஜினீயரிங் படித்தவர்கள் என்றாலும் சென்னையில் தான் சாப்ட்வேர் நிறுவனங்களில் சேர வேண்டிய நிலை இருக்கிறது. ஐடி நிறுவனங்களை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மதுரை உள்ளன.

தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஓசூரிலும், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தூத்துக்குடி, விருதுநகர், வேலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.
ஆனால் விழுப்புரம் மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் வளரவில்லை.. ஐடி நிறுவனங்கள் சென்னை கோவை போன்ற நகரங்களை தாண்டி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அதிக அளவில் உருவாக வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதற்கு அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டை மேம்பட்ட உற்பத்தி மையமாக (Advanced Manufacturing Hub) உருவாக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு (Industry 4.0) தமிழகத்தின் மாணவர்களையும், தொழிலாளர்களையும் தொழிலகங்களையும் தயார்படுத்திக் கொள்வதற்கு தொலைநோக்கு பார்வையுடன் "நான் முதல்வன்" திட்டம், "அறிவுசார் நகரம்" (Knowledge City) மற்றும் ஆராய்ச்சி பூங்காக்கள் (Research Parks) அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்திலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் மினி டைடல் பூங்காக்கள் (Neo Tidel Parks) அமைக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 2021ம் ஆண்டு அறிவித்திருந்தது. அதனை செயல்படுத்தும் வகையில், திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் முறையே ரூ.41.90 கோடி மற்றும் ரூ.35 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு அடிக்கல் நாட்டியிருந்தார். இப்பூங்காக்கள் செயல்படத் தொடங்கும்போது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களது மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பூங்காவை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
விழுப்புரத்தை போல் மற்ற நகரங்களிலும் மினி டைடல் பூங்காக்கள் அதிக அளவில் உருவாக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் மினி டைடல் பூங்காக்களில் அதிக நிறுவனங்கள் ஐடி நிறுவனங்களை அமைக்க முன் வர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications