குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிச்சிருக்கீங்களா.. தமிழக அரசு கொடுத்த குட் நியூஸ்! பயன்படுத்திக்கோங்க
சென்னை: TNPSC, SSC, IBPS, RRB ஆகிய தேர்வுகளுக்கு தயாராகும் தமிழக இளைஞர்கள், இளம்பெண்களுக்கு பலனளிக்கும் வகையில் சூப்பர் அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கு வசதியாக கட்டணமில்லா இலவச பயிற்சி மையம் நடத்தப்படுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். எப்படி அப்ளை பண்ணுவது என்பன போன்றவற்றை இங்கே பார்க்கலாம்.
அரசு வேலை தான் கனவு என்ற லட்சியத்துடன் தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் படித்து வருகிறார்கள். எப்படியாவது அரசு போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்று அதற்கு தயாராகி வருகிறார்கள்.

போட்டித் தேர்வுகள்
நூலகங்கள், கோச்சிங் செண்டர்கள் என இளைஞர்கள், இளம்பெண்களும் போட்டிப் போட்டுக்கொண்டு படித்து வருகிறார்கள். தமிழக அரசால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகளும், மத்திய அரசால் நடத்தப்படும் எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி, ஐபிபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு தமிழக அரசு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பல இளைஞர்கள் படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறிக் கொண்டு இருக்கும் நிலையில், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழக அரசு சார்பில், பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்து TNPSC, SSC, IBPS, RRB ஆகிய தேர்வுகளுக்கு தயாராகும் தமிழக இளைஞர்கள், இளம்பெண்களுக்கு கட்டணமில்லா இலவச வகுப்புகள் சென்னையில் நடைபெறுகிறது.
கட்டணமில்லா பயிற்சி மையம்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 பேருக்கும். சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம், கூடுதல் தலைமைச் செயலாளர் / பயிற்சித் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில், TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில், கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
10 ஆம் வகுப்பு தகுதி தான்
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை, நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.
எப்படி விண்ணப்பிப்பது?
பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in@ 16.05.2025 முதல் 31.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications