குரூப் 1 தேர்வு.. சூட்டோடு சூடாக டிஎன்பிஎஸ்சி தலைவர் சொன்ன குட் நியூஸ்.. இரண்டே மாதத்தில் ரிசல்ட்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று குரூப் 1 தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று (ஜூன்15) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 தேர்வு முடிவுகளானது அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார். மேலும் டிஎன்பிஎஸ்சியில் 12,236 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நியமிக்கப்பட்டு வருகிறது.

டிஎன்பிஸ்சி குரூப் தேர்வுகள்
லட்சக்கணக்கான இளைஞர்கள் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பினை எதிர்பார்த்து படித்து தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. சமீபத்தில் குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 72 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடந்து வருகிறது.
துணை ஆட்சியர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 72 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப பதிவு முடிந்தது.
2.49 லட்சம் பேர் விண்ணப்பம்
குரூப்-1 பிரிவில் 70 காலி பணியிடங்களுக்கும், குரூப்-1 ஏ பிரிவில் 2 இடங்களும் என 72 இடங்களுக்கு இன்று தேர்வு நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 44 தேர்வு மையங்களில் இந்த தேர்வானது நடந்து வருகிறது. குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 2.49 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். குரூப் 1 தேர்விற்கு 2.27 லட்சம் பேரும், குரூப் 1ஏ தேர்வுக்காக 6,465 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
2 மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்படும்
இந்த நிலையில் இன்று நடந்து வரும் குரூப் 1 தேர்வுக்கான ரிசல்டானது இரண்டு மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 1ஏ தேர்வு நடந்து வருகிறது. இதன் முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும். இதேபோன்று டிஎன்பிஎஸ்சியின் மூலம் இந்த ஆண்டு 15,236 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவராக கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23இல் பதவியேற்ற எஸ்.கே. பிரபாகர் ஐஏஎஸ், 'தேர்வுகளுக்கும் முடிவுகளுக்கும் இடையிலான கால இடைவெளியை குறைப்பது தான் எனது முதல் முன்னுரிமை' என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications