Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. 3-ம் கட்ட கலந்தாய்வு எப்போது?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு தற்போது மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பதவிகள், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 08.05.2026 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடைபெற உள்ள என தெரிவித்துள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி நிரப்பி வருகிறது. ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு அதற்கு ஏற்றார் போல் தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு நடத்தி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு தற்போது மூன்றாம் கட்ட கலந்தாய்வு தேதி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண். 07/2025 நாள் 25.04.2025 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
மூன்றாம் கட்ட கலந்தாய்வு
இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வின் முடிவில் உள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிறபதவிகள், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 08.05.2026 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எண்.3. தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in)-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications