அடேங்கப்பா..கொரோனா 2ஆம் அலைக்கு பிறகும்..நாட்டில் இந்தளவு அதிகரித்த வேலைவாய்ப்புகள்.. சூப்பர் நியூஸ்
டெல்லி: இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையிலிருந்து கிட்டதட்ட அனைத்து துறைகளும் விரைவாக மீண்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களிலும் வேலைக்கு ஆள் எடுக்கும் பணிகள் மீண்டும் அதிகரித்துள்ளது நாடு மிக விரைவில் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளதையே காட்டுகிறது.
நாட்டில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சத்தைக் கூட கடந்தது.
இதனால் இந்தியாவில் கிட்டதட்ட அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டன. இதனால் பல்வேறு நிறுவனங்களும் ஆள் எடுப்பதை நிறுத்தி வைத்தனர்.

வேலைவாய்ப்புகள்
நாட்டில் இப்போது கொரோனா 2ஆம் அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பல நிறுவனங்களும் இப்போது மீண்டும் வேலைக்கு ஆள் எடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளன. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் ஆள் எடுக்கும் பணிகள் 15% வரை அதிகரித்துள்ளதாகப் பிரபல வேலை தேடும் தளமான நவுக்ரி தெரிவித்துள்ளது. குறிப்பாக அனைத்து முக்கிய துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

ஐடி துறை
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதம் ஐடி துறையில் வேலைவாய்ப்பு 5% வரை அதிகரித்துள்ளது. கொரோனா முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் 52% வரை அதிகரித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் தற்போது டிஜிட்டல் துறையை நோக்கி அதிகம் நகர்வதே வேலைவாய்ப்புகள் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது என நவுக்ரி தெரிவித்துள்ளது.

மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகள்
கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளிலும்கூட வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், விடுதிகள், உணவகங்கள், ஏர்லைன்ஸ், டிராவல் ஆகிய துறைகளில் (+ 87%) மற்றும் சில்லறை வணிகம் ஆகிய துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதேபோல காப்பீடு (38%), வங்கி (29%), பார்மா ( 22%), கல்வி (15%) துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

நகரங்கள்
நாட்டிலுள்ள அனைத்து மெட்ரோ நகரங்களிலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஜெய்ப்பூர் (50%), வதோதரா (29%) நகரங்களில் இது மிக அதிகமாக உள்ளது. அதேபோல புனே (10%), ஹைதராபாத் (10%), பெங்களூர் (4%) ஆகிய நகரங்களிலும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. உற்பத்தித் துறையிலும் (22%) வரை வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

என்ன காரணம்
இது குறித்து நவுக்ரி தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் கூறுகையில், "இந்தியாவில் வேலைவாய்ப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 15% வரை வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக விடுதிகள் ( 87%) மற்றும் சில்லறை விற்பனை (57%) போன்ற துறைகள் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேபோல ஐடி துறையும் கொரோனாவுக்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 52% வரை அதிகரித்துள்ளது" என்றார்.

கொரோனா 2ஆம் அலை
கொரோனா முதல் அலையிலிருந்து மீண்டதைவிட இரண்டாம் அலையில் இருந்து விரைவாக நாம் மீண்டுள்ளோம். கடந்த ஆண்டு ஜூன் மாத்துடன் ஒப்பிடுகையில் வேலைவாய்ப்பு 95% அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐடி (163%), சில்லறை வர்த்தகம் (114%), டெலிகாம் (124%) துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பின், நாட்டில் வேலைவாய்ப்புகள் எந்தளவு உள்ளது என்பதைப் பொறுத்தே தேசத்தை மீண்டும் கட்டமைக்க முடியும். இப்போது வேலைவாய்ப்புகள் பாசிட்டிவாகவே சென்று கொண்டிருப்பது நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications