தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! பள்ளி ஆசிரியர் நியமனத்தின்.. வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அறிவிப்பு
சென்னை: பள்ளி ஆசிரியர் நியமனத்தின் வயது உச்ச வரம்பை, 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதேநேரம் இந்த தளர்வு சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுவதாகவும் இது அடுத்த ஆண்டு இறுதி வரை மட்டுமே பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆசிரியர் பணி நியமனத்தில் எவ்வித நேரடி நியமனத்திற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
கொரோனாவால் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படாததால் ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் பலர், நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்ச வயது வரம்பினை தாண்டிவிட்டனர்.

தமிழக அரசுக்குக் கோரிக்கை
உச்ச வயது வரம்பினை தாண்டிவிட்டதால் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் வெளியிடப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் அவர்கள் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி விதிகளில், ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தமிழக அரசு உத்தரவு
இது தொடர்பாகப் பள்ளிக் கல்வி ஆணையரும் அரசைக் கேட்டுக் கொண்டிருந்தார். இந்தச் சூழலில் பள்ளி ஆசிரியர் நியமனத்தின் வயது உச்ச வரம்பை, 5 ஆண்டுகள் அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 40-லிருந்து 45-ஆகவும், இதரப் பிரிவினருக்கு 45-லிருந்து 50- ஆகவும் உயர்த்தப்படுகிறது.

வயது வரம்பு நீட்டிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும். இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்குப் பொருந்தும்.

2023ஆம் ஆண்டு முதல்
ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு, 2023 ஜனவரி 1 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பைப் பலரும் வரவேற்றுள்ளனர். கொரோனா பாதிப்பால் எவ்வித பணி நியமனங்களும் வழங்கப்படாமல் இருந்த நிலையில், இதனால் பல பட்டதாரிகள் பாதிக்கப்பட்டனர். இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசின் இந்த அரசாணை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications