SI EXAM: எஸ்பி வரை ஆகலாம்! 1,299 எஸ்ஐ பணியிடங்களுக்கு இன்று நடந்த தேர்வு.. ஓர் இடத்திற்கு எத்தனை பேர் போட்டி
சென்னை: தமிழகத்தில் இன்று சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. சென்னை உள்பட தமிழகத்தின் 46 மையங்களில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் நடந்தது. 1,78,391 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 30 சதவீதம் பேர் ஆப்செண்ட் ஆகியுள்ளனர்.
தமிழக காவல் துறையில் புதிதாக 1299 சப்-இன்ஸ் பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற தகுதியுடன் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பட்டதாரிகள், என்ஜினீயர்கள் என பலரும் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்தனர்.

44 மையங்களில் தேர்வு
1299 பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் தகுதியான 1 லட்சத்து 78 ஆயிரத்து 391 பேருக்கு நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது. இவர்களில் பெரும் பாலானவர்கள் இன்று தேர்வை எழுதினார்கள். இதற்காக தமிழகம் முழுவதும் இன்று பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட 46 மையங்கள் தேர்வு செய்யப்பட்டன.
சென்னையில் 22 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் இன்று சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 2677 பேர் தேர்வை எழுதினார்கள். இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரையில் முதன்மை தேர்வு நடைபெற்றது.
எஸ்பி கூட ஆகலாம்
இதன் பின்னர் மாலையில் தமிழ் தகுதி தேர்வு நடைபெற்றது. காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் வந்தவர்கள் மட்டுமே தேர்வை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக விண்ணப்பித்தவர்களின் இடது கை பெருவிரல் கைரேகை பதிவு செய்யப்பட்டது.
இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களே உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். அதில் வெற்றி பெறுபவர்கள் நேரடி சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேருபவர்கள் படிப்படியாக இன்ஸ்பெக்டர், உதவி டி.எஸ்.பி. கூடுதல் டி.எஸ்.பி. போலீஸ் சூப்பிரண்டு வரையில் பதவி உயர்வு பெற வாய்ப்பு இருப்பதால் இளம் தலை முறையினர் மத்தியில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு மவுசு அதிகமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு இடத்திற்கு எத்தனை பேர் போட்டி
தேர்வு மையங்களில் 2 ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னையில் சுமார் 21 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாகவும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 சதவீதம் பேர் எழுத்து தேர்வு எழுத வரவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். இதன்படி பார்க்கும் போது மொத்தம் 1,24,873 பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதனால் ஒரு இடத்திற்கு 96 பேர் போட்டியிடுகிறார்கள்.












Click it and Unblock the Notifications