உங்க ஏரியாவிலேயே இ-சேவை மையம் நடத்த ஆர்வமா? எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இங்கே..!
சென்னை : தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சேவைகளை ஆன்லைன் வாயிலாக வழங்குவதற்கான இ-சேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
'அனைவருக்கும் இ-சேவை' திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைக்க ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் சார்பாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது இ-சேவை மையங்களை செயல்படுத்தி அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கி வருகிறது.

இ-சேவை மையம்
தமிழ்நாடு அரசின் இ-சேவை மையங்கள் மூலமாக வருவாய்த் துறையின் கீழ் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உட்பட 40 சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல சமூக நலன், மகளிர் உரிமைத் துறை உள்ளிட்ட 22 துறைகளின் 130-க்கும் மேற்பட்ட சேவைகள் இ-சேவை மையங்களில் வழங்கப்படுகின்றன. அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

படித்த இளைஞர்கள்
இ-சேவை மையங்களை நடத்த விருப்பமுள்ளவர்கள் இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். படித்த இளைஞர்கள், தொழில்முனைவோர் போன்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், இ-சேவை மையம் நடத்தும் விண்ணப்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இ-சேவை மையங்கள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இ-சேவை மையங்கள் அமைக்கலாம். மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் வரிசையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் அருகிலேயே விரைவான மற்றும் சிறந்த சேவையை வழங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது.

இந்த வசதிகள் இருக்க வேண்டும்
இந்தத் திட்டத்திற்கு கீழ் விண்ணப்பிக்க, கணினி (Computer), அச்சுப்பொறி (Printer), வருடி சாதனம் (Scanner), கைரேகை அங்கீகார சாதனம் (Biometric device), இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும். மற்றும், குடிநீர் வசதி, பார்வையாளர் அமரும் நாற்காலி, சாய்வுதளம் (Ramp) போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். மேலும் மைய ஆபரேட்டர் கணினி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்திட்டத்தின் தகுதி நிபந்தனைகளை அனைத்தும் அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாயிலாக மட்டுமே
அனைவருக்கும் இ-சேவை திட்டத்தின் வலைத்தளம் கடந்த 15.03.2023 முதல் திறக்கப்பட்டு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தற்போது www.tnesevai.tn.gov.in (அல்லது) www.tnega.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 14.04.2023, 08:00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும், வலைத்தளத்தில் விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, இ-சேவை குறியீடு மற்றும் கடவுச்சொல்லை குறுஞ்செய்தி வாயிலாக அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம். கிராமப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.3000 மற்றும் நகர்ப்புற பகுதியில் இ-சேவை மையம் அமைக்க ரூ.6000 விண்ணப்பம் கட்டணமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications