டிஎஸ்பி, துணை ஆட்சியர் பணியிடங்கள்.. குரூப் 1 தேர்வு! 2 நாள்தான் டைம் இருக்கு.. உடனே அப்ளை பண்ணுங்க
சென்னை: தமிழக அரசின் உயர் பொறுப்புகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. துணை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணபிக்க இன்னும் 2 நாட்கள் தான் டைம் இருக்கிறது. எனவே விண்ணபிக்காதவர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள்.
தமிழகத்தில் அரசு பணி கனவுடன் பல லட்சக்கணக்கான தேர்வர்கள் தேர்வுக்காக படித்துக்கொண்டு இருக்கிறார்கள். பணி பாதுகாப்பு, கை நிறைய சம்பளம், இதர சலுகைகள் இருப்பதால் அரசு பணி என்பது வேலை தேடும் இளைஞர்களின் பெரும் லட்சியமாக உள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளை எதிபார்த்து வருட கணக்கில் தயாராகி வருகிறார்கள்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு
தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையமான டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் தேர்வுகளுக்கு தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தேர்வர்கள் போட்டித்தேர்வுகளுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில், ஆண்டு கால அட்டவணையும் டிஎன்பிஎஸ்சி வெளியிடப்படுகிறது. எந்தெந்த தேர்வுகள் எப்போது நடக்கும் என்பது குறித்து விவரங்கள் இதில் இடம் பெற்று இருக்கும்.
கடந்த ஆண்டு இறுதியில் 2025 க்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி, குரூப் 1, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குரூப் 1 தேர்வுகளை பொறுத்தவரை தமிழக அரசின் உயர் பொறுப்புகளுக்காக நடத்தப்படுகிறது. 70 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
பணியிடங்கள் விவரம்:
துணை ஆட்சியர்: (28 பணியிடங்கள்)
துணை காவல் கண்காணிப்பாளர்: 07
உதவி ஆணையர்: 19
உதவி இயக்குநர் ஊரக வளர்ச்சி: 07
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்: 03
உதவி ஆணையர்: 06 என மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
வயது வரம்பு:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 21 வயதினை நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகும்.
துணை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர், உதவி ஆணையர் (தொழிலாளர்) உள்ளிட்ட பதவிகளுக்கு 39 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி இட ஒதுக்கீட்டு பிரிவினவருக்கு வயது உச்ச வரம்பில் சலுகைகள் உண்டு. கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களை பார்த்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க வரும் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் உடனே விண்ணப்பித்து விடுங்கள். முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணமாக ரூ.100/-செலுத்த வேண்டும். முதல் நிலைத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில் முதன்மைத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள், தேர்வுக் கட்டணச் சலுகை கோராத நிலையில், முதன்மை எழுத்துத் தேர்விற்கான கட்டணமாக ரூ.200/- செலுத்த வேண்டும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://tnpsc.gov.in/Document/tamil/Grp%20I%20notification_Tamil_.pdf












Click it and Unblock the Notifications