வந்தாச்சு வேலை! TNPSC குரூப் 4 2ஆம் கட்ட கவுன்சிலிங் தேதி அறிவிப்பு.. எவ்வளவு போஸ்ட் நிரப்பப்படும்?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் அடங்கிய 3,373 தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 21ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4, குரூப்-2, குரூப்-2A, குரூப்-1 ஆகிய பிரிவுகளில் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த சில ஆண்டுகள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. 2022ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.

அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த குரூப் 4 தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் மூலம், 7 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,219-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10219-ஆக உயர்த்தப்பட்டு, கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நடைபெற்று வந்தது. முதல் கட்டமாக குரூப் 4 பதவியில் வரும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், நில அளவையாளர், பண்டக காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
முதற்கட்ட கவுன்சிலிங்கில், விஏஓ பதவிக்கு 425 இடங்கள், இளநிலை உதவியாளர் பணியில் 5,321 இடங்கள், வரி வசூலிப்பாளர் பணியில் 69 இடங்கள், கள உதவியாளர் பணியில் 20 இடங்கள் மற்றும் கிடங்கு காப்பாளர் பணியில் 1 இடம் ஆகியவை நிரப்பப்பட்டன.
இதையடுத்து, குரூப் 4 தேர்வில் அடங்கிய 3,373 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் நடக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இடையில் ஆகஸ்ட் 29 (ஓணம் பண்டிகை), செப்டம்பர் 6 (கிருஷ்ண ஜெயந்தி) நாட்களில் மட்டும் கவுன்சிலிங் நடைபெறாது.
1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் நவம்பர் 20 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் காலியாக VAO உள்ளிட்ட 47 பதவிகள் இதில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் ஏற்கனவே அனுப்பி வைத்த சான்றிதழ்களின் அடிப்படையில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீடு செய்யப்படும்.












Click it and Unblock the Notifications