தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை.. ஓட்டுநர், நடத்துனர் பணி.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில், சென்னை, மதுரை,கும்பகோணம், கோவை,நெல்லை, விழுப்புரம் உள்பட 8 போக்குவரத்து மண்டலங்கள் உள்ளன. இவற்றில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஓடுகின்றன. கடைசியாக இங்கு 2013-ம் ஆண்டுக்கு ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆனால் அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புதிய பணியாளர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நியமிக்கப்படவில்லை.

இதன் காரணமாக தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என என்று போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் 6 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் - நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படியே தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று முறைப்படி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கே.இளங்கோவன் கூறுகையில், "அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்றுசட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 டிசிசி (ஓட்டுநர் - நடத்துநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இணையதளத்தில் விண்ணப்பம்: இன்று (ஆக.18) பிற்பகல் 1 மணிமுதல் செப்.18-ம் தேதி பிற்பகல் 1மணி வரை ww.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் டிசிசி (ஓட்டுநர் - நடத்துநர்) பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும். தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன்தேர்வு (செய்முறை) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications