குழந்தை நீதி கதைகள்: இந்த வெயில் யாருக்கெல்லாம் ஆபத்து தெரியுமா? உண்மையை புரிந்து கொண்ட பென்!
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. லீவு நாட்களில் யாரெல்லாம் உங்கள் பெற்றோருக்கு உதவியாக இருக்கிறீர்கள். உங்கள் பெற்றோருடன் எந்த செயலை செய்தால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதை புகைப்படமாக எடுத்து ஒன் இந்தியாவிற்கு அனுப்பலாம். இந்த விடுமுறையில் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். சரி இப்போ கதையில் இவங்க ரெண்டு பெரும் என்ன பண்றாங்கனு பார்க்கலாமா..
பென் மற்றும் ஜோ, இரண்டு பேருமே சகோதரர்கள். பள்ளி விடுமுறை விட்டதும் கிராமத்தில் இருக்கும் அவர்களது பாட்டியின் ஊரான கிராமத்திற்கு செல்கிறார்கள். அவர்கள் இருவருக்குமே இந்த கோடை விடுமுறை வந்தாலே, ஒரே குஷியாக ஆகிவிடும். அவர்களின் பாட்டி வீட்டின் அருகில் பெரிய மரங்கள், குருவிகள் என இயற்கையாகவே பார்க்கலாம். ஆனால் இவர்கள் இருக்கும் நகரத்தில் அதெல்லாம் பார்ப்பது அரிது. மரத்தில் தூளி கட்டி விளையாடுவார்கள், அதற்காக எந்த பார்க் செல்ல வேண்டும் என்று அவசியமில்லை. நேரங்காலமில்லாமல் அங்கு விளையாடலாம். அதனால் அவர்களுக்கு அங்கு செல்ல மிகவும் பிடித்து இருந்தது.

பாட்டி ஊருக்கு போனதும் பென், ஜோ ரெண்டு பேருமே நன்றாக விளையாடி சந்தோசமாக இருந்தார்கள். பாட்டி தனது தோப்பில் கொஞ்சம் கோழிகளை வாங்கி வளர்த்து வந்தார். அதை சுத்தம் செய்து உணவளிக்க ஒரு வேலைக்காரரையும் வைத்து இருந்தார். திடீரென அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனது. பாட்டிக்கு என்ன செய்வதென தெரியவில்லை. அப்போது பென், ஜோ இரண்டு பேருமே நாங்கள் உதவுகிறோம் என்று சொல்லவும் பாட்டிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பாட்டி, கோழியை எப்படி பார்த்து கொள்ளவேண்டும் என அவர்களுக்கு சொல்லி கொடுத்தார். இரண்டு நாளுக்கு ஒருமுறை தீவனத்தை மாற்ற வேண்டும். அந்த கூண்டை மூன்று நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக தினமும் தண்ணீர் புதிதாக வைக்க வேண்டும் என்றார். இருவரும் தலை ஆட்டிக்கொண்டனர். முதல் நாள் தீவனமும், தண்ணீரும் ஆளுக்கு ஒரு வேலையை பிரித்து செய்தனர். இரண்டாவது நாள் தண்ணீர் மட்டும் தான் இன்னும் அவர்களுக்கு ஜாலியாக இருந்தது.
மூன்றாவது நாள் வந்தது, கோழிகள் முட்டை இடும் கூண்டை சுத்தம் செய்ய வேண்டும். யார் செய்வதென சண்டை போட்டு, பின்னர் பென் செய்தாக வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். ஜோ கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு, முட்டைகளை எடுத்து கொண்டிருந்தான். கோழிகளுக்கு பென் தண்ணீர் வைத்திருக்க வேண்டும், சுத்தம் செய்த களைப்பில் மறந்துவிட்டான். பாட்டி வந்து பார்க்கும் போது, கோழிகள் தண்ணீருக்காக தவித்து நின்று கொண்டிருந்தன.

அப்போது பென், பாட்டியிடம் எலுமிச்சை ஜூஸ் கிடைக்குமா என்று கேட்க, பாட்டி கோழிக்கு தண்ணீர் வைக்காதது ஏன் என்று கேட்டார். தண்ணீர் தானே நேத்து வைத்தேனே போதாதா என்று சொல்ல, அப்போ உனக்கும் ஜூஸ் நேத்து கொடுத்தேனே என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அடுத்த 2 நாட்கள் தண்ணீரை மறக்காமல் வைத்தான் பென். மீண்டும் மறுமுறை தண்ணீரை மறக்க இதை பார்த்த பாட்டி பென், ஜோ இருவரையும் கூப்பிட்டார். அவன் மறந்தாலும், நீ ஏன் நியாபகப்படுத்தவில்லை என்று கேட்க ஜோ என் தவறுதான் என்று கூறி மன்னிப்பு கேட்டான். உங்களுகாக ஐஸ் கிரீம் வாங்கி வைத்திருந்தேன். இனி அது கிடையாது. முக்கியமாக தண்ணீரும் குடிக்க கூடாது என்று சொன்னார்.
தண்ணீர் தானே என பென் அசால்ட்டாக சொல்ல, ஜோ இனிமேல் மறக்காமல் தண்ணீர் வைக்க வேண்டும் என்றான். பென் நாமளும் தண்ணீர் குடிக்காம இருப்போம் அப்போ பாட்டிக்கு தெரியும் என்று வீம்பு பிடித்தான். மற்ற நண்பர்களுடன் விளையாட சென்ற பென் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு திரும்பி ஓடி வந்தான். ஐயயோ, தண்ணியே குடிக்காம இருக்க முடியாது ப்பா. நாக்கு வெளிய தள்ளி நாயை போல ஆயிடுவேன் போல, என்று சொல்லி அருகில் இருந்த பைப்பில் தண்ணீர் பிடித்து குடித்தான்.
அப்போதுதான் அவனுக்கு புரிந்தது, மனிதர்கள் தண்ணீரை பைப்பில் பிடித்தாவது குடித்து விடுவார்கள். ஆனால் இந்த கோழிகள் பாவம் இல்லையா என்ன செய்யும் என்மேல் தான் தவறு என்று ஜோவிடம் சொல்ல, அதன் பிறகில் இருந்து கோழிகளுக்கு சரியாக தண்ணீர் வைத்தான்.
கோடை வெயில், மனிதர்களை மட்டுமில்லை நீங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளையும் வாட்டி வதக்கும் குட்டிஸ், அவற்றையும் உங்களை போலவே பார்த்துக்கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications