குழந்தை நீதி கதைகள்: சின்ன சின்ன ஆசை! முத்தமிட ஆசை - நாயும் கழுதையும் !
சென்னை: Kids story in Tamil: ஹலோ குட்டிஸ், இந்த வாரம் ஒரு புதுமையான காம்பினேஷன்ல வந்திருக்கேன். எலிக்கும் பூனைக்கும் ஆகாது. நாய்க்கும் பூனைக்கும் ஆகாதுனு. ஆனா நம்ம கதை ஒரு நாய் மற்றும் கழுதை பத்தினது. சொல்லவா?.
ஒரு ஊரில் முதலாளி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாயையும் பொதி சுமக்க ஒரு கழுதையையும் வளர்த்து வந்தார். கழுதையை வேலைக்காரன் ஒருவன் கவனித்து கொள்வான். கழுதைக்கான எல்லா தேவைகளையும் அவன்தான் செய்வான். முதலாளிக்கு தான் வளர்க்கும் நாயின் மீது அதிக அன்பு இருந்தது. ஏனென்றால் இருமுறை திருடர்களை பிடித்து கொடுத்து முதலாளியின் உடமைகளை காப்பாற்றியிருக்கிறது. அவர் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் தனது வாலை ஆட்டி நன்றியை காட்டும். அவர் அமர்ந்திருக்கும்போது அவரது மடியில் படுத்திருந்து அவரது முகத்தை ஆசையாக நக்கும். முதலாளி அதற்கு இறைச்சி துண்டுகளையும் உயர்ரக உணவுகளையும் கொடுத்து அன்பாக வைத்திருந்தார்.

இவற்றையெல்லாம் பார்த்து முதலாளி வீட்டில் வளரும் கழுதைக்கு ஒரே பொறாமை தான். அந்த நாய்க்கு மட்டும் இவ்வளவு சலுகைகள் வழங்குகிறாரே என்று. முதலாளி நாய்க்கு கொடுக்கும் சலுகைகள் அனைத்தும் தனக்கும் கிடைக்க வேண்டும் என எண்ணியது. நாயை போல் தானும் ஒருநாள் முதலாளி மடியில் படுத்து அவரது முகத்தை நக்கவேண்டும் என்று திட்டம் தீட்டியது.
ஒருநாள் காலை முதலாளி தனது நாயுடன் விளையாடி கொண்டிருந்தார். கழுதை முதலாளியை பரிவுடன் பார்த்துக்கொண்டு இருந்தது. தானும் அதுபோல் விளையாட வேண்டுமென்று நினைத்துக்கொண்டு அவரது அருகில் நெருங்கியது. அதற்குள் அவர் வேலை காரணமாக அப்பால் நகர்ந்து சென்றுவிட்டார். கழுதையின் செயல்களை எல்லாம் பார்த்து கொண்டிருந்த நாயோ கழுதையிடம், "நண்பா, எனக்கு கிடைக்கிற சலுகைகளை பார்த்து பொறாமை கொள்ளாதே. என்னைப்போல் ஆக ஆசைபட்டால் முதலாளி அதற்கு அனுமதிக்கமாட்டார்" என எச்சரித்தது. நாயின் வார்த்தைககளை கண்டுகொள்ளாத கழுதை நாயிடம், "அடேய் வாலாட்டி. நான் உன்னைவிட அதிகமான வேலைகள் செய்கிறவன். மதிப்பு மிக்கவன். முதலாளி அப்படி பண்ணமாட்டாரு. நான் செய்வதை வேடிக்கை பார்". என்று பதிலளித்தது. அதற்கு நாய் ஏதும் பேசவில்லை. மாறாக மனதில், "இந்த கழுதைக்கு அடி இருக்கு". என நினைத்துக்கொண்டு நகர்ந்தது.
மறுநாள் முதலாளி புது உடைகளை அணிந்துகொண்டு தனது நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டு இருந்தார். நாயோ தனது கூண்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. இதுதான் சரியான நேரம் என கழுதை முதலாளியின் பக்கத்தில் வந்து அவரது முகத்தை நக்கியது. ஒருபெரும் குரலால் முதலாளி கத்தினார். கழுதையை பார்த்தார். அவருக்கு பயங்கரமான கோபம் வந்தது. அருகிலிருந்த ஒரு கட்டையை எடுத்து கழுதையை நன்கு அடித்தார். கழுதை வலிதாங்க முடியாமல், ஓடி ஒளிந்தது. திரும்ப வரவேயில்லை. இதை பார்த்துக்கொண்டிருந்த நாய் மனதில்," சிலருக்கு பட்டால்தான் புரிகிறது". என்று நினைத்துக்கொண்டு தனது ஓய்வை தொடர்ந்தது.
குட்டிஸ், கழுதை கதை எப்படி இருந்தது. ஸ்கூல்ல டீச்சர்க்கு பிடித்தமான மாணவர்கள் இருப்பாங்க. அவங்க கிட்ட இயல்பாகவே டீச்சர் அன்பா பழகுவாங்க.அதுக்காக உங்கள கொறச்சு நெனைக்காதீங்க. அவங்க மேல பொறாமையும் படாதீங்க நீங்களும் சக மாணவர்கள் மேல பொறாமை படக்கூடாது. உங்களோட வேலைகளை சரிவர செய்தாலே அதற்கான பலன் தானாக கிடைக்கும்.












Click it and Unblock the Notifications