குழந்தை நீதி கதைகள்: உப்பில்லா பண்டம் குப்பையிலே.. அவருக்கே இந்த நிலைமையா?
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க. நீங்க சாப்பிடுற உணவுல உப்பு இல்லைனா நீங்க என்ன பண்ணுவீங்க. ஒருநாள் இந்த உலகில் உப்பு தீர்ந்து போனால் அதற்கு பதில் வேறு ஏதும் இருக்கிறதா என்று யோசித்திருக்கிறீர்களா.
ஒரு ராஜ்ஜியத்தில் அரசர் அமைதியான ஆட்சி செய்து வந்தார். அவருக்கு 3 மகள்கள் இருந்தார்கள். 3 பேருமே அழகில் அறிவில் சிறந்தவர்கள். ஒருநாள் அரசரின் பிறந்த நாள் வந்தது. ராஜ்யத்தில் அனைவரும் அரசருக்கு பொன் பொருள் என பலவித பரிசுகளை கொடுத்தார்கள். அவரது 3 மகள்களும் அரசருக்கு பரிசுகளை கொண்டு வந்தார்கள்.

என்ன கொடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் , முதல் மகள் தங்கத்தால் ஆன ஒரு கட்டியை கொண்டு வந்து பரிசாக கொடுத்தார். அதை வாங்கி கொண்ட அரசர் மகளை நெற்றியில் முத்தம்மிட்டு நன்றியை கூறினார். மக்களும் ஆனந்தத்தில் திளைத்தார்கள்.
அரசரின் 2வது மகள் அரசவைக்கு வந்தார். அவரின் பரிசை ஆவலோடு எதிர்பார்த்த மக்கள் அவரின் பரிசை திறந்து காண்பித்ததும் முகமெல்லாம் மகிழ்ச்சியில் ஜொலித்தது. அரசரும் மகளை இருக்க கட்டி அணைத்து நன்றி தெரிவித்தார். அவர் கொண்டு வந்தது வெள்ளியால் ஆன கட்டி. அயல் நாட்டில் இருந்து அரசருக்காக கொண்டு வரப்பட்டது.
இப்போது 3வது மகளின் என்ட்ரி. மொத்த ராஜ்ஜியமும் அவளை கண் இமைக்காமல் பார்த்தார்கள். அவள் கொண்டு வந்த தட்டு கொஞ்சம் முக்கோண வடிவில் உயரமாக தெரிந்தது. அவள் அரசரை நெருங்கி வந்தாள் பலரும் பலவிதமாக மனக்கோட்டை போட்டார்கள். இது கண்டிப்பா விலையுர்ந்த பொருளாகத்தான் இருக்கும் என்று முனு முனுத்தார்கள்.
அரசரை நெருங்கியதும் இளவரசி தனது பரிசை மூடி இருந்த துணியை விலக்கினார். அதை திறந்தும் அனைவரின் முகமும் தொங்கியது. அரசருக்கு முகம் வெளுத்து போய் கோபம் கொந்தளித்தது. என்ன இது என்று கேட்க, இளவரசி அது உப்பு தந்தையே என்றாள்.
அது தெரிகிறது, ஆனால் இதை தான் உன் தந்தைக்காக நீ பரிசாக அளிப்பாயா? உனக்கு பரிசாக கொடுக்க வேறு எதுமே கிடைக்கவில்லையா என்றார். அவள் இதன் அருமை உங்களுக்கு புரியவில்லை அப்பா என்றாள். அரசர் எங்கும் கிடைக்கும் இந்த பொருளை பரிசாக அளித்த நீ ராஜ்ஜியத்தை விட்டு முதலில் வெளியேறு, என்று கோபமாக ஆணையிட்டார். அவளும் சிரித்து கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றாள்.
சிறிது நாட்கள் கடந்தன. ராஜ்ஜியத்தில் உப்பின் விளைச்சல் இல்லாமலே போனது. எங்கு அலைந்தும் ராஜ்ஜியத்திற்கு உப்பு மட்டும் கிடைக்கவில்லை. அவர் உண்ணும் உணவும் இப்போது உப்பில்லாமல் போக, அவரால் எந்த உணவையும் உண்ண முடியவில்லை. அவர் மட்டுமில்லை ராஜ்யத்தில் இருந்த மக்களுமே உப்பில்லாமல் உணவை உண்ண கஷ்டப்பட்டார்கள்.

மக்கள் வாழ்வதற்கு ஆதாயமாக இருப்பதே உணவுதான். அதை உண்ண முடியாமல் தவித்தார்கள். அரசருக்கு அப்போதுதான் புரிந்தது. தங்கம், வெள்ளியை விட சிறந்த பரிசு உப்பு தான் என்று. தன் மகளின் பரிசை உதாசீன படுத்தியதால் தனது ராஜ்யமே வாழ தகுதியற்றதாக மாறியதை எண்ணி வருந்தினார்.
மகளை மீண்டும் ராஜ்ஜியத்திற்கு வரவழைக்க முடிவெடுத்தார். இளவரசியும் தனது தந்தைக்காக வைத்திருந்த பரிசை கொண்டு வந்தார். அந்த உப்பை விலையுர்ந்த பரிசாக உணர்ந்த அரசர் தலை குனிந்து ஏற்று கொண்டார்.
மீண்டும் ராஜ்ஜியத்தில் உப்பு விளைச்சல் தொடங்கியது. தங்கம், வெள்ளி இதையெல்லாம் தாண்டி நமக்கு வாழ தேவையான உயர்ந்த பொருட்கள் இருக்கின்றன என்பதை இளவரசி அரசருக்கு மட்டுமில்லாமல் ராஜ்ஜியத்திற்கும் உணரவைத்தார்.












Click it and Unblock the Notifications