மனச்சோர்வினால் என்ன புண்ணியம்.. ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லைங்க!
சென்னை: இப்பெல்லாம் எதைப் பார்த்தாலும் டென்ஷன், எதை எடுத்தாலும் டென்ஷன்.. டென்ஷன்தான்.. ஆனால் இதனால் ஏதாவது லாபம் இருக்கா.. யோசிச்சுப் பாருங்க.. ஒரு பைசாவுக்குக் கூட பிரயோஜனம் இருக்காதுங்க.
யாரைப் பார்த்தாலும் அவர்கள் கூறுவது, "ஒரே டென்ஷனா இருக்கு, ஸ்டிரெஸ்ஸா இருக்கு.. கடுப்பா இருக்கு, சலிப்பா இருக்கு.. அலுத்துப் போச்சு" இப்படித்தான் எதிர்மறையாக பேசுகிறார்களே தவிர.. உற்சாகம் கொப்பளிக்க காணப்படும் நபர்களைப் பார்ப்பது அரிதாகி வருகிறது.
இன்றையக் காலக்கட்டத்தில் பொழுது விடிந்தது முதல் இரவுப் படுக்கும் வரை டென்ஷன் தான். காலையில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் போதும் மனைவியை அவள் அலுவலகத்திற்கு வண்டியில் அழைத்துச் செல்லும் போதும் ஏற்படும் டென்ஷன் இருக்கே அப்பப்பா.
மார்க்கா முக்கியம்.. ஜாலியா படிங்க.. அதேசமயம் ஆழ்ந்து படிங்க.. வெற்றி கை கூடும்!
ஒரே டென்ஷன்
என்னால இந்த வேலையை இந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியுமா என்று யோசிக்கும் போது தான் டென்ஷன் ஏற்படுகிறது. நான் ஒரே டென்ஷனா இருக்கேன் என்று இப்போது குழந்தைகள் கூட சொல்கின்றனர்.வேலைக்காக குடும்பத்தையோ குடும்பத்திற்காக வேலையையும் விட்டுக்கொடுக்காமல் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் மனதைக் குழப்பிக் கொள்பவர்களே அதிகம்.
ஆரோக்கியத்தைப் பாதிக்கும்
ஒரு லேலையைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க முடியாத போது தான் நமக்கு டென்ஷன் ஏற்படுகிறது. டென்ஷன் என்பது ஏதோ அந்த நேரத்தில் கோபத்தின் காரணமாக ஏற்படும் உணர்வு அல்ல. நம் மொத்த உடலையும் பாதிக்கக் கூடிய உணர்வு அது. என் மனைவி எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறாள் என்று இன்று எத்தனையோ ஆண்கள் புலம்புகின்றனர்.
காலையிலேயே டென்ஷன்
குழந்தை காலையில் எழுந்திருக்காவிட்டால் டென்ஷன் ஆகாமல் உங்கள் குழந்தைகளை அன்பாக எழுப்புங்கள். உங்கள் வேலைகளை முன்னரே திட்டமிடுங்கள். அதிகாலையில் சீக்கிரம் எழுவது உங்கள் டென்ஷனைக் குறைக்கும். தினமும் குறைந்தது பத்து நிமிடங்களாவது ஆழமாக மூச்சு விடுங்கள். இது உங்கள் மனச்சோர்வை நீக்கிப் புத்துணர்ச்சியைத் தரும். நம் வீட்டிற்கு யாரேனும் வந்தால் முதலில் ஏன் தண்ணீர் கொடுக்கிறோம் தெரியுமா. அவர்களின் டென்ஷனைக் குறைக்கத் தான்.
நடைப் பயிற்சி செய்யுங்கள்
இன்று அனைவரும் சமூக வலைதளங்களான ட்விட்டர் பேஸ்புக் போன்றவற்றில் இரவு அதிக நேரம் செலவு செய்துவிட்டு காலையில் பரபரபப்பாகக் கிளம்புகின்றனர். அதன் விளைவு டென்ஷன். நீங்கள் டென்ஷனாக இருக்கும் நேரத்தில் மரங்கள் நிறைந்த இடத்தில் நடைப்பயிற்சி செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்தமான பாடலைக் கேட்டுக் கொண்டே வேலையைச் செய்துப் பாருங்கள். டென்ஷன் உங்க கிட்ட வரவே வராது.
ஹோம் ஒர்க் டென்ஷன்
குழந்தைகள் பள்ளியில் தரும் வீட்டுப் பாடங்களைச் செய்யத் தெரியாத போது டென்ஷன் அடைகின்றனர். தேர்வு நேரத்தில் படித்தது மறந்து விட்டால் டென்ஷன். மாணவர்களும் டென்ஷன் ஆகாமல் ஆசிரியர் கற்பிக்கும் போதே நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும். பதறிய காரியம் சிதறும் என்பார்கள். நமக்கு டென்ஷன் ஏற்படும் போது நாம் செய்யும் வேலையை முடிக்கும் நேரம் அதிகமாகிறது.
ஆசிரமத்தில் ஒரு முனிவர்
ஆசிரமத்தில் ஒரு முனிவர் வசித்து வந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் கல்விப் பயின்றனர். அதில் ஒரு சீடன் மட்டும் எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகிக் கொண்டு இருந்தான். அவனை அழைத்த முனிவர் அவன் கையில் ஆணியைக் கொடுத்து கோபம் வரும் போதெல்லாம் அந்த ஆணியைச் சுவரில் அடி என்றுக் கூறினார்.சில காலம் கழித்து அவனை அழைத்து அவன் அடித்திருந்த ஆணிகளைப் பிடுங்கச் சொன்னார். ஆணியைப் பிடுங்கியதும் சுவரில் அந்த இடங்கள் பள்ளமாகக் காட்சியளித்தன. உடனே அவர் பார்த்தாயா இப்படித்தான் நீயும் டென்ஷன் ஆவதால் உன் உடல்நிலையும் பாதிப்படைகிறது என்றுக் கூறினான். அனறு முதல் அந்த சீடன் டென்ஷன் ஆகாமல் பொறுமையாக இருந்தான்.
அப்போது இல்லாத டென்ஷனா
ஏன் இப்படி ஆகி விட்டோம்.. நமது அப்பாக்களுக்கு இல்லாத டென்ஷனா.. அப்போதெல்லாம் வீட்டுக்கு 5 குழந்தை 6 குழந்தை ஏன் 10 குழந்தை கூட சகஜமானது. அவர்களே நம்மை அழகாக வளர்த்து ஆளாக்கவில்லையா.. டென்ஷனை சமாளிக்கவில்லையா. பிறகு நாம் ஏன் இப்படிப் புலம்பித் தவிக்கிறோம். அவர்கள் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டுச் செய்தார்கள் ஆனால் நம்மிடம் அந்த திட்டமிடல் இல்லை.
நேரம் ஒதுக்குங்கள்
வேலை செய்தாலும் நமக்கென சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். குழந்தைகளோடு தினமும் அமர்ந்துப் பேசுங்கள். குடும்பத்தோடு அமர்ந்து உண்ணுங்கள். உங்கள் பிரச்சினைகளை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள். எப்போதும் மனதை லேசாக வைத்துக் கொள்ளுங்கள். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். அதனால் உங்களை எப்பவும் மகிழ்ச்சியோடு இருங்கள். டென்ஷன் இல்லாமல் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு சிறக்கும்.