எதைச் செய்தாலும்.. சிறப்பாக செய்யுங்கள்
நாம் எந்த செயலில் இறங்கினாலும், எதைச் செய்தாலும், அதைச் சிறப்பாக செய்ய வேண்டும். சிறந்ததை மட்டுமே செய்ய வேண்டும். சீரிய முறையில் செய்ய வேண்டும்.. இதை மறக்காமல் செயல்படும்போது நாம் எது செய்தாலும் அது சிறப்பானதாக தானாகவே அமைந்து விடும்.
எந்த ஒரு விஷயத்தைச் செய்யும் போதும் ஆர்வத்துடன் செய்யுங்கள். உங்கள் கற்பனைத்திறனை அதில் புகுத்துங்கள். பிறகு பாருங்கள் நீங்கள் நினைத்ததை விட அதைச் சிறப்பாக செய்து முடித்திருப்பீர்கள். எது ஒன்றுமே ஏனோ தானோவென்று செய்யாமல் இந்த செயலை நான் எப்படி சிறப்பாக செய்து காட்டுகிறேன் பார் என்று நினைத்து செய்யும் போதே அதில் பாதி வெற்றி கிடைத்து விடுகிறது.
சாமி கும்பிடும் போது பூ மாலை போடுவோம் அந்த பூக்களை வரிசைப்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். தினமும் தான் நாம் சமைக்கிறோம். ஒரே மாதிரியாக இல்லாமல் கொஞ்சம் வெரைட்டியாக செய்தால் குழந்தைகள் யம்மி யம்மி என்று சாப்பிட்டு விடுவார்கள். எந்த ஒரு செயலும் ஆத்மார்த்தமாக செய்யும் போது அது சிறப்பானதாகவே அமைந்து விடுகிறது. குடும்பத்திற்காக வீட்டில் உணவு தயாரிக்கும் போது அன்போடு கலந்த உணவின் சுவை மேலும் அதிகமாகிறது.
அலுவலகத்திலும் நமக்குக் கொடு்த்த வேலையைச் சிறப்பாகச் செய்தால் அதனால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லா செயல்களையும் ஆர்வமா செய்யுங்க பிறகு பாருங்கள் எல்லாமே சிறப்பானதாக அமையும். மன நிறைவோடு ஒரு செயல் செய்வதால் அது மேலும் அழகாகிறது.
செய்வனத் திருந்தச் செய் என்பார்கள் அது போல செய்யும் செயல்களில் கவனத்தோடும் ஆர்வத்தோடும் உங்களின் திறனையும் அதில் வெளிப்படுத்தி அச்செயலை உங்களால் முடிந்தவரை மேன்மேலும் சிறப்பானதாக்குங்கள். எதைச் செய்தாலும் சிறப்பா செய்யுங்க செமையாக வாழுங்கள்.