கல்வி என்பது சொல்லிக் கொடுப்பதல்ல.. ஒருவரை உருவாக்குவது!
கல்வி என்பது புள்ளிவிவரத்தையும், வரலாற்றையும், பூகோளத்தையும் சொல்லிக் கொடுப்பதல்ல.. ஒரு மனிதனை செதுக்கி அவனை அல்லது அவளை சிறந்த மானுடராக உருவாக்குவதுதான் நல்ல கல்விக்கு அழகு.
கல்வி மனிதனை நல்வழிப்படுத்துகிறது. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வழி செய்கிறது. படிப்பதன் மூலம் பல விஷயங்களை மனிதன் கற்றுக் கொள்கிறான். நம்மைச் சுற்றி என்னவெல்லாம் இருக்கிறது என்று அறிந்துக் கொள்கிறான். சில அறிவியல் தொழில்நுட்பங்களைக் கற்று புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குகிறான்.
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் பாயும் நதிகளில் படகினைக் கண்டான் எதிரொலி கேட்டான் எதனைக் கண்டான் இவ்வுலகைப் படைத்தான் என்பதற்கேற்ப கல்வி பயிலும் ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை அதன் மூலம் வளர்த்துக் கொள்கிறான். கல்வி மனிதனை செதுக்குகிறது வாழ்வின் நன்னெறிகளைப் போதிக்கிறது.
கல்வி கற்க ஒருவர் போதிக்க வேண்டும் என்று அவசியமில்லை. படிக்கும் ஆர்வம் இருந்தால் நீங்களே பல நூல்களைப் படித்து உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வைக் கூட கற்ற கல்வியால் எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்.
கல்வியால் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கலாம். உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள கல்வி உதவுகிறது. கல்வி மட்டுமே ஒருவனை சிறந்த மனிதனாக்கும் என்றறிந்த காமராசர் அவர்கள் பள்ளிக்கூடம் பல திறந்தார். அப்துல்கலாம் அவர்களும் கல்வி கற்பதால் மனிதன் மேன்மை அடைகிறான் என்று கூறியுள்ளார்.