அனுதினமும் .. அப்பாக்கள் இன்றி அசையாது ஓரணுவும்!
அப்பா.. இந்த மந்திர வார்த்தைக்கு உள்ள பலத்தை நாம் அப்பாக்கள் நம் அருகில் இல்லாதபோதுதான் உணர முடியும். அந்த அளவுக்கு அப்பா நமது ஆக்க சக்தியாகவும், ஊக்க சக்தியாகவும், இயங்கு சக்தியாகவும் மாறி நிற்கிறார்.
அப்பாக்களுக்கும், மகன்களுக்கும் அடிக்கடி வரும் சண்டை, அப்பாக்களுக்கும், மகள்களுக்கும் இடையே காணாமல் போய் விடும்.
ஆனால் எந்த மகன் அப்பாவிடம் சண்டை அதிகம் போடுகிறானோ அவனுக்குத்தான் அந்த அப்பா அதிகம் கற்றுத் தருவார், ஆதரவாக இருப்பார், அனுசரணையாகவும் போய்க் கொள்வார்.. அதுதான் அப்பா.
அரவணைப்பும்
அன்பையும் அரவணைப்பையும் கொஞ்சம் கண்டிப்போடு வழங்குவார் அப்பா. தாய் பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறார் தந்தையோ தன் பிள்ளைகளை காலம் முழுவதும் நெஞ்சில் சுமக்கிறார். மகனிடம் கண்டிப்போடு நடந்து கொள்ளும் அப்பாக்கள் தான் தன் மகன் சாப்பிடாமல் உறங்கி விட்டால் துடித்துப் போய் விடுவார்.
பிள்ளைகளிடத்தில் பாசம்
பிள்ளைகள் மீது அவர் காட்டும் அன்பே தனி தான். தோள் கொடுக்கும் தோழனாக தவறுகளைச் சுட்டிக் காட்டும் ஆசானாகவும் பாசம் காட்டும் தாயாகவும் பன்முகம் கொண்டவர் நம் அப்பா. தன் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அவருக்கு நிகர் அவரே.
பெருமைப்படுவது தந்தையே
நாளுக்கு நாள் தன் மகனின் வளர்ச்சியை நினைத்து உள்ளூரப் பெருமைப்படுவதும் தந்தை தான். தோல்வியால் துவண்டு போகும் போது உன்னால் முடியும் என்று நமக்குத் தன்னம்பிக்கை ஊட்டி நமக்கு பக்கபலமாக நிற்பதும் அவரே. மகனின் ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டுவார். மகனுக்கு தனக்குத் தெரிந்ததது தெரியாதது அறிந்தது அறியாதது என அனைத்தும கற்றுத் தருவார்.
கற்றுத் தரும் தந்தை
பணத்தின் அருமையும் உழைப்பின் பெருமையையும் மகனுக்கு உணர்த்துவார். இந்த சமூகத்தில் எப்படி வாழ வேண்டும் எது நல்லது கெட்டது என்று நமக்குக் கற்றுத் தருபவரும் அவரே. மகன் மீது கோபம் கொள்வதால் உங்கள் தந்தை உங்களை வெறுக்கிறார் என்று அர்த்தமில்லை உங்கள் தவறைச் சுட்டிக்காட்டி உங்களை நல்வழிப்படுத்துகிறார் என்று பொருள்.
வெளியில் கண்டிப்பு
பாசத்தை தன்னுள்ளேயே வைத்துக் கொண்டு தன் பிள்ளைகளுக்காகத் தன்னுயிரையும் கொடுக்கத் துணிந்த அப்பாக்களும் உண்டு. தன் பிள்ளையின் முன்னேற்றத்திற்காக தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் அப்பாக்களும் உண்டு. என் தந்தை தான் என் சிறந்த தோழர் என்று நீங்கள் நினைக்கும் போது தான் அவர் முகத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
என் அப்பா
அன்புள்ள அப்பா என் அப்பா என்று நீங்கள் கூறும் வார்த்தையில் தான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மறைந்து அவர் மனதில் தோன்றும் சந்தோசத்திற்கு அளவே கிடையாது. தன் குடும்பத்திற்காகத் தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு அவர்களுக்காகவே வாழ்பவர் அப்பா. எத்தனை சோதனைகள் வந்தாலும் இதுவும் கடந்து போகும் கவலைப்படாதே உனக்குத் துணையாக இருக்கிறேன் என்று மகனுக்கு உறுதுணையாக இருக்கும் ஒரே ஜீவன் அப்பா தான். இன்று தந்தையர் தினம். எல்லா தந்தையருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.