நேற்று வரலாறு.. இன்று வரம்.. நாளை புதிர்!
நேற்று என்பது வரலாறு.. நாளை என்பது புதிர்.. இன்று மட்டும்தான் நிதர்சனம்.. அது மட்டுமே நமக்குக் கிடைத்த வரம்.. அதை அருமையாக வாழ்ந்து விட்டுப் போக வேண்டும்.
நேற்றை நடந்ததைப் பற்றி நினைத்து வருத்தப்படுவதாலும், பெருமைப்படுவதாலும் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. நாளையைப் பற்றி நம்மால் கணிக்கக் கூட முடியாது. 2 மாதத்திற்கு முன்பு இருந்த உலகம் எப்படி.. !
அன்று யாராவது யோசித்துப் பார்த்திருப்பார்களா.. இன்று இப்படி ஒரு வைரஸைப் பார்த்து நாமெல்லாம் முடங்கிப் போவோம் என்று. எனவே இந்த நிமிடம்தான் உண்மையானது.. அதை மட்டுமே நாம் சிறப்பாக வாழ வேண்டும்.
இன்று நாளை
நேற்று என்பது கையில் இல்லை நாளை என்பது பையில் இல்லை இன்று மட்டுமே நிஜம். இன்று அனைவரும் வீட்டில் தனித்திருந்தாலும் உணர்வால் இணைந்திருக்கிறோம். இன்றைய நிலையில் குடும்பத்தோடு நேரம் செலவிட முடிகிறது. காலில் றெக்கைக் கட்டியது போல் அலுவலகத்தை நோக்கி வேகமெடுத்த நாட்கள் உண்டு.அப்படியெல்லாம் இல்லாமல் இன்று நினைத்த நேரத்தில் எழுந்திருக்கிறோம்.அதுவே ஒரு வரமல்லவா.
குடும்பத்தினரோடு
உங்கள் பிள்ளைகளோடு நேரம் செலவழியுங்கள். உங்களுக்குப் பிடித்தப் புத்தகங்களைப் படியுங்கள். கோடை காலத்திற்கேற்றப் பழவகைகளை உண்ணுங்கள். உங்கள் இணையோடு பேசாத பேச்சுக்களையெல்லாம் பேசி மகிழுங்கள். உங்கள் வீட்டில் மொட்டை மாடி இருந்தால் அதில் பிள்ளைகளோடு விளையாடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள்.
யோகா செய்யுங்கள்
உங்களுக்கு யோகா தெரிந்தால் உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். கிச்சனில் சிறு சிறு உதவிகள் செய்யலாம். இன்று அனைவருக்கும் வாழ்வில் எது முக்கியம் என்பதை இந்த வைரஸ் உணர வைத்துள்ளது. காய்கறிகள் மளிகைப்பொருட்கள் மருந்துக் கடைகள் போன்றவற்றின் அவசியத்தை இந்த வைரஸ் உணர்த்தியுள்ளது.
நாளை இருப்போமா தெரியாது
இன்று இருக்கும் நாம் நாளை இருப்போமா என்று தெரியாது. அதனால் மற்றவர்களிடம் துவேஷம் பாராட்டாமல் அன்போடு இருங்கள். கிடைத்த இன்றைய நேரத்தை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள். வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவியுங்கள்.நேற்று நடந்ததை நினைத்தும் நாளை எதிர்நோக்கும் சூழ்நிலைகளையும் நினைத்து வருந்தாமல் இன்று மகிழ்ச்சியோடு இருங்கள்.