வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர்: தாக்குதல்களில் 11 தீவிரவாதிகள் உள்பட 21 பேர் சாவு
ஸ்ரீநிகர்:
காஷ்மீர் பகுதியில் திங்கள்கிழமை நடந்த வெவ்வேறு மோதல்களில் 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
வடக்கு காஷ்மீரில் திங்கள்கிழமை பிற்பகல், நவ்பேரா பந்திப்போரா பகுதியில் நிடந்த கிரனேட் தாக்குதலில் 2 பேர் இறந்தனர். 9 பேர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனம் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டை எறிந்தனர். இதில் வாகனம் சேதமடைந்தது. இதில் இரண்டு பேர் இறந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
குப்வாரா மாவட்டத்தில், காதிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் தாக்குதல் நடந்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.
புலவா மாவட்டத்தில், குஷிபோரா என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் பஷீர் அகமது கனாய் வீட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது வீட்டுக்குக் காவல் இருந்த பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டனர். இதையடுத்து தீவிரவாதிகள் தப்பி விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
யூரி பிரிவில் பரம்பல்லா என்ற இடத்தில் தீவிரவாதிகள் வைத்த கன்னி வெடியில் சிக்கி கம்மது அப்சல் என்பவர் இறந்தார். மேலும் ஹந்தவாரா பகுதியில் முன்னாள் தீவிரவாதியான முகம்மது சுல்தான் என்பவரை, தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
தீவிரவாதிகளுக்கு எதிராக தகவல் கொடுக்கும் குல்லா பட் என்பவரின் துண்டிக்கப்பட்ட உடல் சிதார் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல, குப்வாரா பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகள் மீது அவர்கள் திருப்பிச் சுட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளுக்குத் தகவல் தரும் முகம்மது யூசுப் என்பவரை தூஹார் சபபோரா என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். மற்றொறு சம்பவத்தில் தீவிரவாதிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவன் என்று கூறிக் கொண்ட குலாம் முகம்மது கோஜா என்பவனை, ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேடுதல் வேட்டையில் நான்கு தீவிரவாதிகள் பிடிபட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வெவ்வேறு தாக்குதல்களில் 21 பேர் இறந்துள்ளனர்.
யு.என்.ஐ.