மேட்ச் ஃபிக்ஸிங்: புகார் நிரூபனமானால் வாழ்நாள் தடை - சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் முடிவு
லண்டன்:
சர்வதேச கிரிக்கெட்டில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் எந்த வீரராவது ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவர் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடத்தடை விதிக்கப்படும் என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரித்துள்ளது.
மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகவும், சூதாட்டக்காரர்களிடம் லஞ்சம் வாங்கியதாகவும் சில கிரிக்கெட் வீரர்கள் மீது குற்றச்சாட்டுகள்கூறப்பட்டு வருகின்றன. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அவசரக் கூட்டம் கடந்த இருநாட்களாக லண்டனில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், கவுன்சிலில் உறுப்பினராக உள்ள நாடுகளின்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். குற்றச்சாட்டு கூறப்பட்ட விளையாட்டு வீரர், தன் குற்றத்தை ஒப்புக் கொண்டால் அவருக்குப் பொது மன்னிப்புவழங்குவதா அல்லது வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை விதிப்பதா என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சமீபத்திய குற்றச்சாட்டுகளால் கிரிக்கெட் விளையாட்டின் மதிப்பு குறைந்துள்ளதைக் கருத்தில் கொண்டும் அந்த மதிப்பை மீண்டும் ஏற்படுத்த என்னநடவடிக்கை மேற்கொள்வது என்றும் இக் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டது.
லஞ்சம், மேட்ச் ஃபிக்ஸிங் போன்ற குற்றச்சாட்டுகளில் எந்த வீரராவது ஈடுபட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது என்று இக் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு கவுன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறியதாவது:
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் கிரிக்கெட் வீரர்கள், வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்படுவார்கள். கவுன்சிலின் புதிய சட்டதிட்டங்களுக்கு உடன்படாத நாடுகள் சஸ்பெண்ட் செய்யப்படும்.
மேட்ச் ஃபிக்ஸிங், லஞ்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுதந்திரமான ஊழல் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம் அடுத்தஇரு மாதத்துக்கள் அமைக்கப்படும். மூத்த மற்றும் சட்ட நிபுணத்துவம் பெற்றவர் இதன் தலைவராக நியமிக்கப்படுவார்.
குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய பிறகு, கவுன்சிலின் நெறிமுறைக் கமிஷன் தலைவர் லார்டு கிரிஃபித்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
கிரிக்கெட்டின் மதிப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிக கவனத்துடன் உள்ளது. அந்த வகையில்கிரிக்கெட்டின் மதிப்பு குறையும் வகையில் செயல்படும் எந்த வீரர் மீதும் கடும் நடவடிக்கை கவுன்சில் ஒருபோதும் தயங்காது என்றார் டால்மியா.
இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மீதான புகாரை விசாரிப்பதற்காக ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் குழு புதன்கிழமை டெல்லி வந்தது.அங்கு டெல்லி குற்றப் பிரிவு போலீஸாருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர். இக்குழுவினர் நான்கு நாட்களுக்கு டெல்லியில் இருப்பர்.