தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கைப் பிரச்சனையில் மத்திய அரசு முடிவுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் பாமக, மதிமுக கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக்கவேண்டும் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி பிரதமர் வாஜ்பாயிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து வாழப்பாடி ராமமூர்த்தி கூறியதாவது:
இலங்கையில் 40 ஆயிரம் ராணுவ வீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றி வளைத்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டிற்கு உதவ வேண்டுமா? வேண்டாமா? என்பதுகுறித்து அறிந்து கொள்ள பிரதமர் வாஜ்பாய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் ராணுவத்தையோ, ஆயுதங்களையோ அங்கே அனுப்பக் கூடாது என்ற வாஜ்பாய் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் மதிமுகமற்றும் பாமக வினர் இந்த முடிவுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.
தனி ஈழம் என்பதே அவர்களது முடிவாக உள்ளது. அண்டை நாடான இலங்கையின் தேசிய ஒற்றுமைக்கும், நாட்டின் அமைதிக்கும் ஊறு விளைவிக்காதவாறுஇந்தியா முடிவெடுத்துள்ளதாகத் தெளிவாக பிரதமர் வாஜ்பாய் அறிவித்துள்ளார்.
ஆனாலும் கூட்டணியில் உள்ள இவ்விரு கட்சிகள் மட்டும் தங்களது எதிர்ப்புக் குரலைக் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது.
இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியின் முடிவு வரவேற்கத்தக்கது. கூட்டணிக் கட்சியின் கொள்கைக்கு விரோதமாகச் செயல்படும் பாமக,மற்றும் மதிமுக வினரை கூட்டணியிலிருந்தே பிரதமர் வாஜ்பாய் நீக்க வேண்டும்.
இவ்வாறு வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications