தமிழகத்தில் இன்று
மே 15, 2000
3. குயிலின் காதற் கதை
மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண்; மற்றதிலோர்
இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால்.
பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால்
மற்றப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ் (5)
வொற்றைக் குயில் சோக முற்று தலைகுனிந்து
வாடுவது கண்டேன் மரத்தருகே போய்நின்று,
""பேடே! திரவியமே! பேரின்ப்ப் பாட்டுடையாய்!
ஏழுலக்ம் இன்பத் தீ ஏற்றுந் திறனுடையாய்!
பீழையுனக் கெய்திடதென்? பேசாய்!""எனக் கேட்டேன். (10)
மாயக் குயிலதுதான் மானுடர் பேச்சினிலோர்
மாயச் சொல் கூற மனந் தீயுற நின்றேன்.
"" காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்""என்றதுவால்,
""வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய்.(15)
ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்
காதலர் நீ யெய்துகிலாக் காரணந்தான் யா"" தென்றேன்.
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கானக் குயிலிக் கதை சொல்ல லாயிற்று:-
லைவும் வருத்தமுநான் பார்க்காமல், (20)
உண்மை முழுதும் உரைத்திடுவேன், மேற்குலத்தீர்!
பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்
அறிவும் வடிவுங் குறுகி, அவனியிலே
சிறியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும்,
தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ (25)
யாவர் மொழியும் எளிதுணரும் பேறுபெற்றேன்;
மானுடரவர் நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்!
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும் (30)
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மாணுடப் பெண்கள் வளருமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிகுங் (35)
கொற்றோடியார் குக்குவெனக் கொஞ்சம் ஒலியினிலும்
கண்ண மிடிப்பார் தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைகரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமும் பாட்டினிலும்,(40)
வேயின் குழலொடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.
(அடுத்து குயிலின் காதற்கதை இரண்டாம் பாகம்)
Back To Index