தமிழகத்தில் இன்று
விஜயவாடா:
போலி ரெயில்வே பாஸ் தயாரித்து விற்ற விஜயவாடா நகர காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு அமைப்பாளர் சுப்பாராவ் கைது செய்யப்பட்டார்.
இது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
விஜயவாடாவில் காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி.,பிரிவு அமைப்பாளராக இருப்பவர் சுப்பாராவ். இவர் தன்னுடைய கட்சித் தொண்டர்களிடம் ரெயில்வே பாஸ் வழங்கிஅதற்காக ரூ 200 முதல் 500 வரை ஒவ்வொருவரிடமும் பணம் வசூலித்தார்.
பலரிடம் பணம் வசூலித்ததில் மொத்தத்தொகை ரூ1 லட்சம் வரை வசூலானது. இந்த ரெயில்வே பாஸின் மூலம் ஹைதராபாத்திலிருந்து சென்னையில் ராஜீவ்காந்தி நினைவிடமான ஸ்ரீபெரும்புதூர் வரைப் பயணம் செய்து அவரது நினைவிடத்தைப் பார்க்கலாம் என்றும், தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம்செய்யலாம் என்றும் கட்சித்தொண்டர்களிடம் கூறி பணம் வசூலித்தார்.
குண்டூர் மற்றும் கிருஷ்ணா பகுதியிலிருந்து 3,000 க்கும் மேற்பட்டோர் இந்த ரெயில்வே பாஸை பணம் கொடுத்து வாங்கினார்கள்.
அதில் சிலர் செவ்வாய்க்கிழமை விஜயவாடாவிலிருந்து சென்னை வரும் ரெயிலில் இந்த பாஸைக் காட்டி பயணம் செய்ய முயன்றார்கள். டிக்கெட் பரிசோதகர்பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த ரெயில்வே பாஸ்கள் அனைத்தும் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறித்த நகர காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு அமைப்பாளர் சுப்பராவைப் போலீசார் கைது செய்தனர். அவர் மேல்வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.