தமிழகத்தில் இன்று
மே 18, 2000
குயிலும் குரங்கும்
மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே -
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே!-
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்: (5)
பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ!
காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ
மாயக் குயிலோர் மரக்கிளையில் வீறறிருந்தே
பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் (10)
விம்மிப் பரிந்துசொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்
அம்மவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்.
தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது?
அந்தக் கணமே அதையுங் குரங்கினையும் (15)
சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன்.
கொன்றுவிடு முன்னே, குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்,
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே, (20)
பேடைக் குயிலிதனைப் பேசியது;- ""வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல்தடுக்குந் தரலாமோ
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரெனமானிடரே, (25)
எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
கோயில், அரசு. குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே அந்த மனிதர் உயர்வெனலாம்
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே (30)
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம் (35)
ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குதித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும் ,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே (40)
வானரர்போ லாவாரோ? வாலுக்கு ப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, தந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ? (45)
(நாளை முடியும்)
Back To Index












Click it and Unblock the Notifications