தமிழகத்தில் இன்று
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் வாங்கிய கடனை அடைப்பதற்காக 26 விவசாயிகள் தங்களது சிறுநீரகத்தை விற்றுள்ளனர்.
ஆந்திரத்தில் விவசாயத் துறைக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன. இதற்கேற்ற வகையில் கடந்த ஆண்டு பல விவசாயிகள் நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் தற்போதுகடனை அடைப்பதற்காக விவசாயிகள் சிறுநீரகத்தை விற்றுள்ளதாக வந்துள்ள செய்திகள் முதல்வர் நாயுடுவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பருத்தி மற்றும் மிளகாய் விவசாயிகள்தான் பெருமளவில் கடனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர்தான் தங்களது கடனை அடைப்பதற்காகசிறுநீரகத்தை விற்றுள்ளனர். அனைவரும் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் பலநாடு என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள்.
ரூ. 40,000-த்திலிருந்து ரூ. 50,000 வரைக்கும் தங்களது சிறுநீரகத்தை அவர்கள் விற்றுள்ளனர். டெல்லி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ளபல்வேறு மருத்துவமனைகளில் இந்த அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது.
வறட்சியைப் போக்க அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. மாநிலகாங்கிரஸ் தலைவர் ராஜசேகர ரெட்டி, ஆளுநர் ரங்கராஜனைச் சந்தித்து இதுதொடர்பாக புகார் கூறியுள்ளார்.
ஆளுநரிடம் அவர் கூறுகையில், கடந்த ஆண்டு பயிர் விளைச்சலில் ஏற்பட்ட நஷ்டத்தைத் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.இப்போது கடனை அடைப்பதற்காக சிறுநீரகங்களை விற்றுள்ளனர். விவசாயிகள் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்துவருவதையே இது காட்டுகிறது என்றார் ராஜசேகர ரெட்டி.
இதற்கிடையே, பலநாடு பகுதியில் போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இதுபோல, சிறுநீரகங்களை விவசாயிகள் விற்றுவந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் தவிர மேலும் 100 பேர் வரை சிறுநீரகங்களை விற்கத் தயாராக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்காகபல்வேறு மருத்துவ பரிசோதனைகளையும் அவர்கள் செய்துள்ளனர்.
சிறுநீரகத்தை விற்றதாக எட்டு விவசாயிகள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் டெல்லியில் வைத்து சிறுநீரகங்களைவிற்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.