தமிழகத்தில் இன்று
சென்னை:
அரசின் நல்ல உணர்வைப் புரிந்து கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நீலகிரி மாவட்ட தேயிலைத் தொழிலாளர்கள் அமைதி காக்க வேண்டும் என்றுமுதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி தேயிலை சிறு விவசாயிகளுக்காக, இதுவரை எட்டு சதவீதமாக இருந்த விற்பனை வரியை 4 சதவீதமாக அறிவித்து இருக்கிறோம். மத்தியஅரசு மானியமாக தேயிலைத் தூளுக்கு விற்பனை விலை ரூபாய் 55-க்கு குறைவாக இருந்தால், 5 ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசுஅறிவித்துள்ளது.
அத்துடன் இறக்குமதிக்கான சுங்க வரியிலும் 15 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்தி வெளிநாட்டு தேயிலை இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளது.
இந்த நிலையிலும், நீலகிரி விவசாயிகள் பிரச்சினை பற்றிய முழு நிலவரம் அறிய அரசு சார்பில் தொழில்துறை ஆணையர், மத்திய தேயிலை மண்டல தலைமைநிர்வாகி, நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினர் நேரில் சென்று விசாரித்து அரசுக்குத் தகவல் தருவார்கள். தேயிலை உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள் அமைதியாக இருக்க வேண்டுகிறேன்.போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட விவசாயிகளை டெல்லியிலிருந்து அனைவரையும் விடுதலை செய்ய ஆணை பிறப்பித்த நல்ல உணர்வை மதித்து சிறுவிவசாயிகள் நடந்து கொண்டார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.