தமிழகத்தில் இன்று
டெல்லி:
இலங்கையைப் பிரித்து தனி தமிழ் ஈழம் உருவாவதை ஆதரிக்க முடியாது. அதேபோல இலங்கைப் பிரச்சினையில் ராணுவ ரீதியில் தலையிடவும் மாட்டோம்என்று இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக அறிவித்துள்ளன.
இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான அரசியல் தீர்வைக் காண ஒத்துழைக்கத் தயார் என்றும் இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அரசியல் விவகாரத் துறை செயலாளர் தாமஸ் பிக்கரிங் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் லலித் மான்சிங்இருவரும் டெல்லியில் நடத்திய இரு சுற்றுப் பேச்சுக்குப் பின் இந்த அறிவிப்பை இரு நாடுகளும் வெளியிட்டன.
பின்னர் லலித் மான்சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தீவிரவாத அமைப்பு. இந்திய அரசுக்கும் இந்த விடுதலைப் புலிகளுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை.
யாழ்ப்பாணத்தில் சிக்கியுள்ள 30,000 ராணுவ வீரர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று இலங்கை அரசு இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை.மனிதாபிமான உதவிகளைச் செய்ய இந்தியா தயாராகவுள்ளது. ஆனால் இதுவரை இலங்கைத் தரப்பிலிருந்து எந்தக் கோரிக்கையும் இதுவரைவரவில்லை.
யாழ்ப்பாணத்தில் போரில் ஈடுபடும் நோக்கத்தில் இந்தியா இல்லை என்றார்.
பிக்கரிங் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் போர் நடக்கும் பகுதிகளில் மக்கள் பாதிக்கப்படாமல் அனைத்துத் தரப்பினரும் பார்த்துக் கொள்ள வேண்டும்.மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக இந்தியா மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் அமெரிக்கா ஆதரவு அளிக்கும்.
விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு. பல்வேறு அரசியல்வாதிகளைக் கொன்ற அமைப்பு. அமெரிக்காவில் இந்த அமைப்புக்கு நிதிதிரட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு பிக்கரிங் பாகிஸ்தான் போகிறார். பின்னர் இலங்கைக்கும் செல்கிறார். இந்தியாவும், அமெரிக்காவும், நார்வேநாட்டின் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்தும் விவாதித்தனர். இதுதவிர, காஷ்மீர் பிரச்சினை குறித்தும் இரு தரப்பும் பேசியதாகத் தெரிகிறது.
பிஜிப் பிரச்சினை குறித்து பிக்கரிங் கருத்துத் தெரிவிக்கையில், ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உடனடியாக மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.வன்முறையற்ற வகையில் அங்குள்ள பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் பிறரை மீட்கத் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்றார் பிக்கரிங்.
பிரதமர் வாஜ்பாயை அமெரிக்கா வருமாறு, அந்நாடு அழைத்திருப்பதாக பின்னர் லலித் மான்சிங் கூறினார். இதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும்என்றார் அவர்.
யு.என்.ஐ.