தமிழகத்தில் இன்று
டெல்லி-காத்மாண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை மீண்டும் துவங்கியது
டெல்லி:
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த டெல்லி-காத்மாண்டு இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ விமான சேவைவியாழக்கிழமை முதல் துவங்குகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து, டெல்லி சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காஷ்மீர் தீவிரவாதிகளால்கடத்தப்பட்டது. முதலில் லாகூருக்கும், பின்னர் துபாய்க்கும் கொண்டு செல்லப்பட்ட விமானம் இறுதியில் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்தப்பட்டது. இதில் ஒருபயணி, துபாய் விமான நிலையத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு மூன்று தீவிரவாதிகளை மத்திய அரசு விடுதலை செய்த பின் கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்திற்குப்பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காரணம் காட்டி காத்மாண்டுவிற்கான விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு வியாழக்கிழமை முதல் காத்மாண்டுவிற்கு மீண்டும் விமான சேவை துவங்கியது. காலை 11.15மணிக்கு 210 பயணிகளுடன் ஏர்பஸ் விமானம் காத்மாண்டு கிளம்பும். மீண்டும் பிற்பகலுக்கு மேல் அங்கிருந்து கிளம்பி டெல்லி வந்து சேரும்.
கல்கத்தா-காத்மாண்டு விமான சேவை, வெள்ளிக்கிழமை முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், கல்கத்தாவிலிருந்து கிளம்பும் விமானத்தில் பயணம் செய்ய 130 பேர் முன்பதிவு செய்துள்ளனர். 145 இருக்கைகள்கொண்ட விமானம் இது.
காத்மாண்டு-டெல்லி, காத்மாண்டு-கல்கத்தா மார்க்கத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு சில நாட்களாகும். இந்தியாவிலிருந்து விமான சேவைதுவங்கிய பிறகே காத்மாண்டுவிலிருந்து பயணிகள் வருகை அதிகரிக்கும் என்றார் அவர்.
டெல்லி-காத்மாண்டு விமானத்தில் பயணம் செய்ய ஜூன் 3-ம் தேதி பல்க் புக்கிங் ஆகியுள்ளது. வாரணாசியிலிருந்து காத்மாண்டுவிற்கு விரைவில் விமானசேவை துவங்கும். வாரணாசிக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் அங்கிருந்து விமான சேவையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கூறினார்.
விமானக் கடத்தலுக்குப் பிறகு நேபாளத்திற்கு விமான சேவை நிறுத்தப்பட்டதால், இரு நாடுகளின் சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.காத்மாண்டுவிற்கு மீண்டும் விமான சேவையை இந்தியா துவக்க வேண்டும் என்று நேபாள அரசு பலமுறை கோரி வந்தது. ஆனால் திரிபுவன் விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி தரும் வரை சேவையைத் துவக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் குழு காத்மாண்டு சென்று, திரிபுவன் விமான நிலையத்தில்செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்தது. இதையடுத்து மீண்டும் விமான சேவையைத் துவக்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைசெய்தது.
விமானக் கடத்தலின்போது பைலட்டாக இருந்த தேவி சரண், பல மணி நேரம் விமானத்தை ஓட்டி, பயணிகளின் உயிரைக் காத்தது குறிப்பிடத்தக்கது.இதற்காக சமீபத்தில் அவருக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றின் "சேப் ஸ்கைஸ் (safe skies award) விருது கிடைத்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications